/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிளஸ் 2 தேர்வில் 488 பேர் 'ஆப்சென்ட்'
/
பிளஸ் 2 தேர்வில் 488 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 03, 2026 07:13 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வின் முதல் நாளில், 488 மாணவ, மாணவியர் தேர்வெழுத வரவில்லை.
தமிழகத்தில் நேற்று பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு துவங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 108 அரசுப்பள்ளிகள், 6 நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 79 தனியார் மெட்ரிக் பள்ளிகள் உள்பட, 193 மேல்நிலைப்பள்ளிகளில், 10,846 மாணவர்கள், 11,802 மாணவியர், 226 மாற்றுத்திறன் மாணவர், உள்பட, 22,874 பேர் நடப்பாண்டில், பிளஸ் 2 படிக்கின்றனர். இதில், இடைநின்றவர்கள், நீண்ட நாட்கள் விடுப்பு எடுத்தவர்கள் நீங்கலாக, 22,058 மாணவ, மாணவியருக்கு 'ஹால் டிக்கெட்' வழங்கப்பட்டது. மாவட்டத்தில், 88 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ் 2 தேர்வில், நேற்று முதல் தேர்வில், 21,570 பேர் தேர்வெழுதினர். 488 பேர் தேர்வு எழுதவில்லை.
முன்னதாக தேர்வெழுத வந்த, மாணவியருக்கு, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மகேந்திரன் தலைமையில், ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், துாய அன்னை பாத்திமா தேவாலய அருட்தந்தை அருள்ராஜ், தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமையில், தேர்வெழுதும் மாணவியிருக்காக கூட்டு பிரார்த்தனை நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட சி.இ.ஓ., மதன்குமார் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர்.

