/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோவில்களில் தைப்பூச சிறப்பு பூஜை வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்
/
கோவில்களில் தைப்பூச சிறப்பு பூஜை வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்
கோவில்களில் தைப்பூச சிறப்பு பூஜை வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்
கோவில்களில் தைப்பூச சிறப்பு பூஜை வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்
ADDED : பிப் 02, 2026 06:47 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், 89ம் ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த மாதம், 26ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தைப்பூச நாளான நேற்று காலை, 4:00 மணிக்கு மேல், 6:00 மணிக்குள், சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதிகாலை முதல், பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி துாக்கியும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் அருகில், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஞ்ரங்தள் அமைப்பு சார்பில், பக்தர்கள், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையுடன் முருகன் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவையொட்டி, கிருஷ்ணகிரி நகரிலிருந்து கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில், 210 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு பணிகளை எஸ்.பி., தங்கதுரை நேரில் பார்வையிட்டார். புகழ் பெற்ற மாட்டுச்சந்தை நேற்று துவங்கி, 5 நாட்கள் நடக்கிறது.
* ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள வேல்முருகன் கோவிலில், தைப்பூசத்தையொட்டி முருகனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் வேல்முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்தனர்.
உத்தனப்பள்ளி அருகே அகரம் முருகன் கோவிலில், நேற்று காலை தேரோட்டம் நடந்தது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனை வழிபட்டனர்.
ஓசூர் முல்லை நகர் காயத்ரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமிக்கு, சிறப்பு பூஜை செய்யப்பட்டன. இக்கோவிலிலிருந்து, பிரம்ம மலைக்கு பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர். பக்தர்கள் கந்தசஷ்டி கவசம் படித்து வழிபாடு செய்தனர். அதேபோல், ஓசூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மலை மீதுள்ள அழகன் முருகன் கோவிலில், தைப்பூச சிறப்பு பூஜை நடந்தன.

