/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யானை பின்னங்காலை பிடித்து உயிர் தப்பிய வனக்காவலர்
/
யானை பின்னங்காலை பிடித்து உயிர் தப்பிய வனக்காவலர்
ADDED : ஜூலை 14, 2025 06:27 AM

தேன்கனிக்கோட்டை: கெலமங்கலம் அருகே வேட்டை தடுப்பு காவலரை ஒற்றை யானை தாக்கியதில், அதன் பின்னங்காலை பிடித்து உயிர் தப்பினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தட்ரஹள்ளி அருகே முருங்கம்பட்டியைச் சேர்ந்தவர் நீலகண்டன், 29; தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், நான்கு ஆண்டுகளாக வேட்டை தடுப்பு காவலராக தற்காலிக பணியில் உள்ளார்.
ராயக்கோட்டை வனச்சரகத்தில் இருந்து, நேற்று காலை 6:30 மணிக்கு வெளியேறிய ஒற்றை யானை, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தடிக்கல் கிராமம் அருகே தடுப்பணை பகுதியில் சுற்றித்திரிந்தது. அதை அருகில் உள்ள வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில், வனக்காவலர் ராம்குமார் தலைமையில், 15க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, யானை, வேடிக்கை பார்க்க வந்த ஒருவரை தாக்க ஓடியது. அவரை காப்பாற்றுவதற்காக கீழே நின்றிருந்த வேட்டை தடுப்பு காவலர் நீலகண்டன், பட்டாசு வெடித்து, சத்தம் போட்டு யானையை விரட்டினார்.
இதில், ஆக்ரோஷமான யானை நீலகண்டனை துரத்தி தாக்கியதில், வலது கால் மற்றும் இடது கால் தொடையில் படுகாயமடைந்தவர், யானையின் பின்னங்காலை இறுக பிடித்துக் கொண்டார். யானை மற்றொரு பின்னங்காலால் அவரை உதைக்க முயன்றதில், முடியாமல் போகவே, யானை மேற்கொண்டு தாக்காமல் அங்கிருந்து சென்றது.
இதையடுத்து, வனத்துறையினர் நீலகண்டனை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.