/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தரமில்லாத நிலம் ஏக்கர் ரூ.3.27 கோடி தலைதெறிக்க ஓடும் ஐ.டி., நிறுவனங்கள்
/
தரமில்லாத நிலம் ஏக்கர் ரூ.3.27 கோடி தலைதெறிக்க ஓடும் ஐ.டி., நிறுவனங்கள்
தரமில்லாத நிலம் ஏக்கர் ரூ.3.27 கோடி தலைதெறிக்க ஓடும் ஐ.டி., நிறுவனங்கள்
தரமில்லாத நிலம் ஏக்கர் ரூ.3.27 கோடி தலைதெறிக்க ஓடும் ஐ.டி., நிறுவனங்கள்
ADDED : பிப் 02, 2025 02:36 AM

ஓசூர்:ஓசூரில் தரமில்லாத ஒரு ஏக்கர் நிலத்திற்கு எல்காட் நிறுவனம், 3.27 கோடி ரூபாய் வரை கேட்பதால், ஐ.டி., நிறுவனங்கள் ஓட்டம் பிடிக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாகலுார் சாலை, விஸ்வநாதபுரத்தில் 2008 பிப்., 26ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, 174.47 ஏக்கர் பரப்பளவில் ஐ.டி., பார்க் அமைக்க அடிக்கல் நாட்டினார். இங்கு, 2011ல் பணி துவக்கப்பட்டு, 2017 அக்டோபரில் முன்னாள் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். மொத்தம், 62,100 சதுரடி பரப்பில், மூன்று தளங்களுடன் உள்ள கட்டடத்தில், ஏழு நிறுவனங்கள் வாடகைக்கு இயங்குகின்றன.
பெங்களூரு நகரின் போக்குவரத்து நெருக்கடி, நிலத்தின் விலை மற்றும் காவிரி விவகாரத்தால் ஏற்படும் அமைதியற்ற சூழலால், பல முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், ஓசூர் ஐ.டி., பார்க்கில் தொழில் துவங்க வரும் என, எல்காட் நிர்வாகம் எதிர்பார்த்தது. அங்கு, ஐ.டி., நிறுவனங்கள் கட்டடம் கட்ட வசதியாக, ஒரு ஏக்கர் நிலம், 1 கோடி ரூபாய்க்கு, 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்படும் என, அறிவித்தது.
அப்பகுதி நிலங்களில் பாறைகள் அதிகமாக உள்ளதுடன், நிலம் சமதளமாக இல்லை. அதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நிறுவனங்கள், பாறைகளை உடைத்து நிலத்தை சமன் செய்யவே, 1 கோடி ரூபாய் வரை செலவாகும் எனக்கூறி, நிலம் வாங்காமல் பின்வாங்கின.
இந்நிலையில், ஐ.டி., பார்க் நிலத்தின் மதிப்பை தற்போது ஏக்கருக்கு, 3.27 கோடி ரூபாய் என, எல்காட் உயர்த்தியுள்ளது. இதனால் புதிய நிறுவனங்கள் வரத்து கேள்விக்குறியாகி உள்ளது. ஐ.டி., பார்க் வளாகத்தில், நான்கு நிறுவனங்கள் நிலம் வாங்கியுள்ள நிலையில், ஒரு நிறுவனம் மட்டுமே கட்டுமான பணியை மேற்கொண்டு வருகிறது.
அங்கு, கடந்த, 17ல் அரசின் தகவல் தொழில்நுட்ப துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார்ஜெயந்த், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தனர். நிலத்தை சமன்படுத்த முடிவு செய்யப்பட்டது. கர்நாடகாவிலிருந்து, தமிழக எல்லையான ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பது, பன்னாட்டு விமான நிலையம் போன்ற திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதனுடன், ஐ.டி., பார்க் நிலத்தின் மதிப்பை குறைத்து, முன்னணி நிறுவனங்கள் வருவதை உறுதி செய்தால், பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவர் என, தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.