/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தலைவர் பதவியை குறி வைக்கும் கட்சியினர்
/
தலைவர் பதவியை குறி வைக்கும் கட்சியினர்
ADDED : செப் 16, 2011 12:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவியை குறி வைத்து அனைத்து அரசியல் கட்சியினரும் சீட் பெறும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர்.
டவுன் பஞ்சாயத்தாக இருந்த கிருஷ்ணகிரி 1968ம் ஆண்டு நகராட்சியாக உருவாக்கப்பட்டது. தற்போது, இந்த நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் சேர்த்து 21,528 ஆண்கள், 22,091 பெண்கள் சேர்த்து மொத்தம் 43,619 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 1986ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.,வை சேர்ந்த தக்காளி ஆறுமுகம் நேரடி தேர்தல் மூலம் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து 1996ம் ஆண்டு நடந்த நேரடி தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தசரதன் நேரடி தேர்தல் மூலம் நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2001ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்தியமூர்த்தி நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2006ம் ஆண்டு கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், நகராட்சி தலைவர் பதவி கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, தி.மு.க.,வை சேர்ந்த பரிதா நவாப் ஒன்றாவது வார்டில் வெற்றி பெற்று பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஆதரவின் பேரில் நகராட்சி தலைவரானார்.
தற்போது, நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர் பதவிக்கு பொதுமக்கள் நேரடியாக ஓட்டு போட்டு தேர்வு செய்யும் முறை மீண்டும் வந்துள்ளது. இந்த தேர்தலிலும் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், தி.மு.க.,வை சேர்ந்த நிர்வாகிகளும் தங்களது மனைவியை தேர்தல் களத்தில் இறக்க முடிவு செய்து கட்சி தலைமையிடம் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வில் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படாத நிலையில் அ.தி.மு.க.,வினரும், இந்த கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.,வினரும் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட சீட் வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளர். ஆனால், தி.மு.க., வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவி தங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்த தி.மு.க.,வினர் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டி என்ற முடிவால் காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி தேர்தலில் நின்று தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த தேர்தலில் பா.ம.க.,வும் தனித்து போட்டியிடவுள்ளதால் அந்த கட்சியினரும் நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்காத நிலையில் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வி.சி., கட்சியினரும் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர்.
நகராட்சி தலைவர் பதவி நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளதால் சுயேச்சைகள் பலரும் கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளனர். இருப்பினும் இந்த தேர்தலில் போட்டியிட முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ், - பா.ம.க., ஆகிய கட்சியினர் சீட் வாங்க கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

