ADDED : ஆக 29, 2026 02:30 AM

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமசந்திரன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களாக பணிபுரிந்து பணி மூப்பில் அரசு பணிக்கு ஈர்க்கப்பட்டு ஊர்நல அலுவலர், மேற்பார்வையாளர் நிலை - 2, ஆசிரியர் உள்ளிட்ட பிற அரசு பணிகளில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்று, 2019 ஆக., முதல், 2,000 ரூபாய் சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் இவர்களுக்கு, 2026 பிப்., 13ல் உயர்த்திய சிறப்பு ஓய்வூதிய உயர்வு இதுநாள் வரை அரசால் அனுமதிக்கவில்லை. உயர்த்தப்பட்ட தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும். தமிழகத்தில், 2017 அக்., முதல் குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் அனுமதிக்கப்படுகிறது. இதை பணி ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு அமுல்படுத்த வேண்டும். பணி ஓய்வு பெற்ற பிற துறை ஊழியர்களுக்கு அரசு பண்டிகை முன்பணம் வழங்குவதை போல், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
