ADDED : டிச 17, 2024 01:39 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மருதேப்பள்ளியில், கால்நடைபராமரிப்புத் துறை மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இணைந்து, கோமாரி நோய் தடுப்பூசி முகாமை நடத்தியது. தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 3.22 லட்சம் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், 6வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. முகாம் வரும் ஜன., 20 வரை தொடர்ச்சியாக நடக்கிறது. முகாம்களுக்கு வரும் கால்நடை உரிமையாளர்கள் தங்களின் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை தடுப்பூசி குழுவினரிடம் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு காது வில்லைகள் அணிவிக்கப்பட்ட உடன், தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர் பிரசன்னா, ஆவின் பொதுமேலாளர் சுந்தரவடிவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

