/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விதை தரத்தை அறிய பரிசோதனை அவசியம்
/
விதை தரத்தை அறிய பரிசோதனை அவசியம்
ADDED : அக் 16, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி: விதையின் தரத்தை அறிந்து கொள்ள, விதை பரிசோதனை செய்ய வேண்டும் என, கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் லோகநாயகி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தரமான விதை என்பது, முளைப்புதிறன், புறத்துாய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும்.தேவையான பயிர் எண்ணிக்கை பராமரிக்க, நல்ல முளைப்பு திறன் வேண்டும். இதனால், விதை செலவு குறையும். புற துாய்மை பரிசோதனையில், பிற பயிர் விதை மற்றும் களை விதை கலப்புகள் கண்டறியப்படுவதால், விதையின் இனதுாய்மை மற்றும் புறதுாய்மை காப்பாற்றப்படுகிறது.
முளைப்பு திறனை காக்க, ஈரப்பதத்தை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
விதைகளை சேமிக்கும் போது, பூச்சி நோய் தாக்குதலால் முளைப்பு திறன் கெடாமல் நீண்ட நாட்கள் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக்கூடாது. இதற்கு விதை பரிசோதனை அவசியம். விதை விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள், தாங்கள் இருப்பு வைத்துள்ள விதையின் தரத்தைஅறிந்து கொள்ள, விதை மாதிரி எடுக்க வேண்டும்.
விதை உரிய விபரங்களுடன் ஒரு மாதிரிக்கு, 80 ரூபாய் என்ற விகிதத்தில் வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி, தரத்தை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.