டூவீலர் அபராதத்தில் சுருட்டல்: எஸ்.ஐ., மீது குற்றச்சாட்டு
டூவீலர் அபராதத்தில் சுருட்டல்: எஸ்.ஐ., மீது குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 08, 2026 04:32 AM
கிருஷ்ணகிரி:''டூவீலர்களுக்கு
அபராதம் விதித்து, தொகையை சுருட்டியதாக எழுந்த குற்றச்சாட்டில்
எஸ்.ஐ., பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளார்,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட
எஸ்.பி., அனிதா கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்,
சிப்காட்டிலிருந்து கடந்த பிப்.,ல், மகாராஜகடை எஸ்.ஐ.,யாக பணி
மாறுதலானவர் அன்பழகன். திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்த இவர்,
கடந்த, 2011ல் எஸ்.ஐ., ஆன போதும், ஏற்கனவே சில குற்றச்சாட்டுகளில்
சிக்கியதால், இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில்,
மகாராஜகடையில் பொறுப்பேற்ற பின், டூவீலர் ஓட்டிகளிடம் பண வசூலில்
ஈடுபட்டதாக, மீண்டும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டூவீலர்களில்
மது போதையில் வருவோரிடம், 'டிரங்க் அன்ட் டிரைவ்' வழக்குப்பதிந்து
அவர்களது வாகனத்தை பறிமுதல் செய்துள்ளார். அவர்கள், எஸ்.ஐ.,யிடமே
பணத்தை கட்டி, தங்கள் வாகனங்களை மீட்டுள்ளனர். அதேபோல தலைக்கவசம்,
லைசென்ஸ் இல்லாதவர்களிடம் அபராதம் விதித்து, அதை கணக்கில் காட்டாமல்
எடுத்துள்ளதாக, அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது
குறித்து, மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் சென்றதால், அவரை
ஆயுதப்படைக்கு மாற்றி விளக்கமளிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால்,
அங்கு செல்லாத எஸ்.ஐ., அன்பழகன் விடுப்பில், தன் சொந்த ஊருக்கு சென்று
விட்டார்.
இது குறித்து மாவட்டஎஸ்.பி., அனிதா கூறியதாவது:
எஸ்.ஐ.,
அன்பழகன் மீது, குற்றச்சாட்டு வந்துள்ளது உண்மைதான். விசாரணை
இன்னும் நடத்தப்படவில்லை. அவர் மீது வந்த குற்றச்சாட்டால் பணியிட
மாற்றம் செய்யப்பட உள்ளார். எந்த ஸ்டேஷன் என்பது விரைவில்
அறிவிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
