/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
என்.ஆர்.ஐ., கொலை வழக்கு 10 பேருக்கு ஆயுள் தண்டனை
/
என்.ஆர்.ஐ., கொலை வழக்கு 10 பேருக்கு ஆயுள் தண்டனை
ADDED : மார் 02, 2025 04:12 AM
ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாதைச் சேர்ந்தவர் பங்கஜ் திரிவேதி. அமெரிக்காவில் வசித்து வந்த என்.ஆர்.ஐ., எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியரான அவர் ஆன்மிக அமைப்பான சுவாத்யான் பரிவாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
2001ல் குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, வெளிநாட்டில் நிதி திரட்டியதில் முக்கிய பங்காற்றினார். அது தொடர்பான செலவு விபரங்களை கேட்ட திரிவேதி மீது, பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
அந்த அமைப்பினர் மீது பல்வேறு கோர்ட்களில் திரிவேதி ஊழல் வழக்கு தொடர்ந்தார்.
இதைதொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்ததால் பாதுகாப்பு கோரி போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து குஜராத் முதல்வரிடம் கொடுத்த மனுவில் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு பரிவார் அமைப்பை சேர்ந்த 30 பேர்தான் பொறுப்பு என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 2006 ஜூன் 15ல் ஆமதாபாதின் ஜிம்கானா எல்லிஸ் பாலம் அருகே, சிலர் கிரிக்கெட் பேட்டால் திரிவேதியை தாக்கி கொலை செய்தனர்.
இதையடுத்து பரிவார் அமைப்பை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். திரிவேதி கொலை தொடர்பான வழக்கு ஆமதாபாதில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. 83 சாட்சிகளை விசாரித்த நீதிபதி பாரத் ஜாதவ் பரிவார் அமைப்பை சேர்ந்த, 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.