/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை, ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய 3 ஊழியர்கள் கைது
/
மதுரை, ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய 3 ஊழியர்கள் கைது
மதுரை, ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய 3 ஊழியர்கள் கைது
மதுரை, ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய 3 ஊழியர்கள் கைது
ADDED : ஜூன் 19, 2024 06:41 AM

உசிலம்பட்டி : மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் மைய பில் கிளார்க், வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியனைச் சேர்ந்தவர் முருகன் 50. இவரது மனைவி வனிதா.
இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் மற்றும் மனைவி பெயரிலுள்ள மேலும் 2 ஏக்கர் நிலம் ஆகியவற்றை குத்தகைக்கு எடுத்து நெல் பயிரிட்டுள்ளார். அறுவடையான 277 மூடை நெல்லை அம்பட்டயன்பட்டி நெல் கொள்முதல் மையத்தில் விற்பனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்த பில் கிளார்க் ஜெகதீசன் 39, மூடைக்கு ரூ.40 வீதம் ரூ.16,620 கொடுத்தால் மட்டுமே எடைபோட்டு பில் தருவேன் என்றார்.
இதுகுறித்து முருகன் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சத்தியசீலனிடம் புகார் செய்தார். நேற்று மாலை நெல்கொள்முதல் மையத்தில் ரூ.16,620 ஐ முருகனிடமிருந்து ஜெகதீசன் வாங்கிய போது, இன்ஸ்பெக்டர் ரமேஷ்பிரபு தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
திருச்சி லால்குடி அருகே உள்ள ரெட்டிமாங்குடியைச் சேர்ந்த ஜெகதீசன் 3 மாதங்களாக மாற்றுப்பணியாக இங்கு பணிபுரிந்து வந்தார்.
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வெள்ளைய புரத்தைச் சேர்ந்த டெய்லர் நாகராஜ். இவருக்கு சொந்தமான நிலத்தை பட்டா மாறுதல் செய்ய ஓரியூர் வி.ஏ.ஓ., மாதவனை 35, அணுகினார். மாதவன், கிராம உதவியாளர் காளிஸ்வரனை 34, சென்று பார்க்குமாறு கூறினார். பட்டா மாறுதல் செய்ய அவர்கள் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்.
இது குறித்து நாகராஜ் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் செய்தார்.
டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் கொடுத்த ரசாயணம் தடவிய ரூ.20 ஆயிரத்தை நேற்றிரவு 8:00 மணிக்கு வி.ஏ.ஓ., தங்கியிருந்த அறையில் மாதவன், காளிஸ்வரனிடம் நாகராஜ் கொடுத்தார். இருவரையும் கையும், களவுமாக போலீசார் கைது செய்தனர்.