/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ.1.50 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு 5 பில் கலெக்டர்கள் அதிரடியாக 'சஸ்பெண்ட்'
/
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ.1.50 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு 5 பில் கலெக்டர்கள் அதிரடியாக 'சஸ்பெண்ட்'
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ.1.50 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு 5 பில் கலெக்டர்கள் அதிரடியாக 'சஸ்பெண்ட்'
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ.1.50 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு 5 பில் கலெக்டர்கள் அதிரடியாக 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 19, 2024 07:14 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில், 100 வார்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு வரி விதிப்பு, வரி வசூல் பணிகள் ஆன்லைனில் நடக்கின்றன. புதிய கட்டடங்களுக்கு, அவை அமைந்துள்ள மாநகராட்சி பகுதிக்கு ஏற்ப வரிவிதிப்பு செய்யப்படும்.
ஒரு கட்டடத்திற்கு ஒருமுறை வரி விதித்தால், நீதிமன்ற உத்தரவு அல்லது மாநகராட்சி கூட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தான் வரி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பது விதி.
ஆனால், வரிவிதிப்பு, வசூல் தொடர்பாக கமிஷனர் நடத்திய வாராந்திர ஆய்வு கூட்டங்களில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு விதிமீறி, வரி குறைப்பு நடந்துள்ளது தெரியவந்தது.
இதனால், இரு உதவி கமிஷனர்கள் தலைமையில் சிறப்பு குழு அமைத்து, விசாரணை நடத்த கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.
விசாரணையில், மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும், 150 கட்டடங்களுக்கு வரியை குறைத்து நிர்ணயித்து வசூலிக்கப்பட்டதும், அவ்வகையில் மாநகராட்சிக்கு, 1.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளதும் தெரியவந்தது.
இந்த முறைகேட்டில் 13 பில் கலெக்டர்களுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அதிக தொகை முறைகேடு செய்த பில் கலெக்டர்களான 76வது வார்டு ராமலிங்கம், 6வது வார்டு ரவிச்சந்திரன், 64வது வார்டு கண்ணன், 85வது வார்டு ஆதிமூலம், மண்டலம் 5 இளநிலை உதவியாளர் மாரியம்மாள் ஆகியோரை கமிஷனர் தினேஷ்குமார், 'சஸ்பெண்ட்' செய்தார்.
கமிஷனர் கூறியதாவது:
வரிவிதிப்பு முறைகேட்டில், 13 பேர் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் ஓய்வு பெற்றுவிட்டார். ஒருவர் இறந்து விட்டார். மீதியுள்ள, 11 பேருக்கும் நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்டுள்ளோம். அதிக முறைகேடு செய்தவர்களை முதற்கட்டமாக சஸ்பெண்ட் செய்துள்ளோம்.
முறைகேடு அனைத்தும் ஒரு பில் கலெக்டர், 'லாக் இன்' மூலமே நடந்துள்ளது.
சொத்து வரி மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொடர்பு இருந்தால், போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்போம். குறைத்து வரி நிர்ணயம் செய்த சம்பந்தப்பட்ட, 150 கட்டடங்களுக்கும் புதிய மதிப்பீடு செய்ததன் வாயிலாக, 1.50 கோடி ரூபாய் இழப்பீடு தவிர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.