/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'இயலா … அயலா… விழிப்புணர்வு இல்லையே' தமிழகத்தில் ஊடுருவும் பிறநாட்டு மரங்கள்
/
'இயலா … அயலா… விழிப்புணர்வு இல்லையே' தமிழகத்தில் ஊடுருவும் பிறநாட்டு மரங்கள்
'இயலா … அயலா… விழிப்புணர்வு இல்லையே' தமிழகத்தில் ஊடுருவும் பிறநாட்டு மரங்கள்
'இயலா … அயலா… விழிப்புணர்வு இல்லையே' தமிழகத்தில் ஊடுருவும் பிறநாட்டு மரங்கள்
ADDED : செப் 03, 2024 04:35 AM
மதுரை: ''சுற்றுச்சூழலுக்கு பொருத்தமில்லாத அயல்நாட்டு மரங்கள் மதுரை ரோடுகளை அலங்கரிப்பதால் பல்லுயிர் பரவலாக்கம் தடைபடும்'' என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமி வெப்பமயமாவதை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், தன்னார்வலர்களால் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அதில் மதுரை மண்ணுக்குரிய, பல்லுயிரி சூழலுக்கு பொருந்தாத அயல்நாட்டு மரங்களே அதிகம் நடப்படுகின்றன. உணவு, மூலிகை, விறகு, நிழல், அழகிய மலர்கள் உள்பட பல காரணங்களுக்காக கோனகார்ப்பஸ், துாங்கு மூஞ்சி மரம், குல்மொகர், சிங்கப்பூர் செர்ரி, நாகலிங்கம், சூபா புல், சீமைக் கொன்றை, சீமை அத்தி, கியூபா பனை, சொர்க்கம், மயில் கொன்றை உள்ளிட்ட அயல் தாவரங்கள் பரவலாக தமிழகத்தில் நடப்படுகின்றன என்கிறார் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்தாசன்.
பல்லுயிருக்கு அச்சுறுத்தல்
அவர் கூறியதாவது: உணவு மற்றும் விறகுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சீமை கருவேலம், கோனகார்ப்பஸ், சூபா புல், பார்த்தீனியம் தாவரங்கள் இயற்கையான காட்டில் கூட பரவி நம் பல்லுயிரிய சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
இதையடுத்து குஜராத் மாநிலத்தில் கோனகார்ப்பஸ் மரங்களை 2023 செப்டம்பரில் தடை செய்துள்ளனர். கோனகர்ப்பஸ் மரங்கள் தமிழகத்தில் பரவலாக நடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான ரோடுகளை துாங்குமூஞ்சி மரங்களும், குல்மொகர் மரங்களும்தான் அலங்கரிக்கின்றன.
விழிப்புணர்வில்லா தமிழகம்
தமிழகத்தில் அயல் தாவரம், இயல் தாவரம் என்பது பற்றிய விழிப்புணர்வு துவக்கநிலையில்கூட இல்லை.
தளபதி என்கிற பட்டாம்பூச்சி ரகங்கள் கடம்ப மரங்களில்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. நீர்கடம்ப மரத்தை அழித்து அதற்கு பதிலாக அயல் தாவரமான துாங்கு மூஞ்சி வாகை, குல்மொகர் மரக்கன்றுகள் வைக்கப்படுவதால் இந்த பட்டாம்பூச்சிகளின் வாழ்வியல் சூழல் மாற்றமடைகிறது.
கடம்ப மரங்கள் அழியும் போது அவற்றோடு பரிணாம வளர்ச்சியில் பல்லாயிரம் ஆண்டுகளாக பின்னி பிணைத்து வளர்ந்து வந்த ஒரு பல்லுயிரிய சூழலே அழிகிறது.
கடம்ப மரங்கள் இருந்த இடத்தில மீண்டும் கடம்ப மரங்கள் வைப்பதே சரியான தீர்வு. இது நம் பகுதியில் உள்ள அனைத்து வகை இயல் தாவரங்களுக்கும் பொருந்தும். எல்லா மரமும் நிழல் தருகிறது, காற்றும் பசுமையும் தருகிறது என்கிற சிந்தனையில் இருந்து விடுபட்டால்தான், நாம் இழந்த பல்லுயிரிய சூழலை மீட்கமுடியும்.
இயற்கை சூழலியலில் அயல் தாவரங்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தமிழக அரசோ, வேளாண் பல்கலையோ, வனக்கல்லுாரிகளோ ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.