/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.1.61 கோடி மோசடியில் நீதிமன்றம் கைது உத்தரவு
/
ரூ.1.61 கோடி மோசடியில் நீதிமன்றம் கைது உத்தரவு
ADDED : ஏப் 28, 2024 01:58 AM
மதுரை: பங்கு சந்தையில் டிபாசிட் செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் எனக்கூறி, 1.61 கோடி ரூபாய் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
பங்கு சந்தையில் டிபாசிட் செய்தால் அதிக வருமானம் ஈட்ட முடியும் எனக்கூறி, சிலரிடம் மாலியமான் என்பவர் உட்பட சிலர் பணம் வசூலித்தனர். தொகையை திரும்பத் தராமல் மோசடியில் ஈடுபட்டதாக மாலியமான் மீது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.அந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
அரசு தரப்பு: 1.61 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மனுதாரருக்கு எதிராக ஒன்பது புகார்கள் வந்துள்ளன. அவர் தலைமறைவாக உள்ளார். மனுதாரரை கைது செய்த பிறகே, விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும்.
நீதிபதி: உண்மை மட்டுமே வெற்றிபெறும் என்பது அரசின் இலச்சினையில் இடம் பெற்றுள்ளது. அரசின் எதிர்பார்ப்பிற்கேற்ப தங்கள் கடமையை நிறைவேற்றுவதும், உண்மை மட்டுமே வெற்றி பெறுவதை உறுதி செய்வதும் விசாரணை அதிகாரி உட்பட ஒவ்வொரு அரசு ஊழியரின் கடமையாகும்.
தனிப்படையை உருவாக்கி, மனுதாரரை விரைவில் கைது செய்ய வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. விசாரணை அதிகாரி, 6 மாதங்களில் விசாரணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

