ADDED : மே 10, 2026 08:41 PM
திருமங்கலம்: மதுரை மாவட்டத்தின் முக்கிய சந்திப்பு நகரமாக இருக்கும் திருமங்கலத்திற்கு மதுரை மாட்டுத்தாவணி விருதுநகர், உசிலம்பட்டி, தேனி, காரியாபட்டி பகுதிகளில் இருந்து தினசரி தனியார் பஸ்கள் பல இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பஸ்கள் நகருக்குள் நுழையும் போது விதிமுறைகளை பின்பற்றாமல் அதிக அளவு வேகத்தோடு வருவதுடன் போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களிலும் எதிரே வரும் சிறிய வாகனங்களை கணக்கில் கொள்ளாமல் மோதுவது போல் பறக்கின்றனர். இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
மேலும் தடை செய்யப்பட்ட ஹாரன்களை அதிக சத்தத்தோடு அடிப்பதால் ரோட்டில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை. போக்குவரத்து போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. விதிமுறை மீறும் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
