மாமரங்களில் பழத்துளைப்பான் கட்டுப்படுத்தும் வழியென்ன
மாமரங்களில் பழத்துளைப்பான் கட்டுப்படுத்தும் வழியென்ன
ADDED : மே 17, 2026 05:42 PM

மதுரை: அலங்காநல்லுார் பகுதி விவசாயிகளின் தோட்டத்து மாமரங்களில் பழத்துளைப்பான் புழு தாக்குதலால் சேதம் ஏற்பட்டது குறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா, உதவி இயக்குநர் ரிஜ்வானா பர்வீன், வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ் ஆய்வு செய்தனர்.
அலங்காநல்லுார், கொட்டாம்பட்டி, மேலுார், வாடிப்பட்டி, சேடபட்டி, மதுரை கிழக்கு, டி.கல்லுப்பட்டி, திருப்பரங்குன்றத்தில் மாவட்டத்தில் 5400 எக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திடீர் புழுத் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து சுரேஷ் கூறியதாவது:
இந்த புழுக்கள், மாம்பழத்தை துளைத்து உள்ளே சென்று சதைப்பகுதியை உண்பதால் பழங்கள் சேதமடைகிறது. பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழித்தால் புழுக்கள் வளர்ச்சியை தடுக்க முடியும். மாமரத்தின் அடிப்பகுதியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். 5 முதல் 7 செ.மீ., அளவுள்ள சிறிய மாங்காய்களை காகிதம் அல்லது வலைப்பையால் மூடுவதன் மூலம் பூச்சிகள் முட்டை இடுவதை தடுக்கலாம். மரத்தின் உள்ள கிளைகளை வெட்டி ஒளி, காற்றோட்டத்திற்கு வழி செய்தால் பூச்சிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். மற்ற மரங்களில் பரவுவதை தடுப்பதற்கு வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது நீமசால் 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
பழங்களின் வளர்ச்சி காலத்தில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மருந்து தெளிக்க வேண்டும் என்றார்.
