/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு நிலத்தில் கபர்ஸ்தான்: தடை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
அரசு நிலத்தில் கபர்ஸ்தான்: தடை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு நிலத்தில் கபர்ஸ்தான்: தடை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு நிலத்தில் கபர்ஸ்தான்: தடை கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : மே 16, 2024 05:51 AM

மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அரசு புறம்போக்கு மயானம் இடத்தில் மயானத்திற்கு (கபர்ஸ்தான்) கூடுதல் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பிற்கு தடை கோரியதில் தற்போதைய நிலை தொடர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பொன்னமராவதி ஜெ.ஜெ.நகர் உமையண்ணா தாக்கல் செய்த பொதுநல மனு:
பொன்னமராவதி மேற்கு கிராமத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நிலத்தை ஹிந்துக்கள் மயானமாக பயன்படுத்துகின்றனர். அதில் அரசு தரப்பில் கட்டுமானங்கள், ஆழ்துளை கிணறு, தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. முறையாக பராமரிக்காததால் ஆக்கிரமிப்புகள் முளைத்தன. மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி நவீன மயானம் அமைக்கப்படும் என்றனர்.
'அரசு புறம்போக்கு மயானம் என வகைப்பாட்டிலுள்ள அந்த இடத்தில் இஸ்லாமியர்களுக்கான மயானத்திற்கு (கபர்ஸ்தான்) கூடுதல் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆட்சேபனை இருப்பின் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்,' என பொன்னமராவதி வருவாய் ஆய்வாளர் மே 3 ல் அறிவிப்பு வெளியிட்டார்.
ஹிந்துக்கள் பயன்படுத்தும் நிலத்தை போதிய கள ஆய்வு செய்யாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. 'கபர்ஸ்தான்' அமைக்க நிலம் கையகப்படுத்தும் வருவாய் ஆய்வாளரின் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.ராஜசேகர் அமர்வு: இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். நில நிர்வாக கமிஷனர், புதுக்கோட்டை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை ஜூன் 4 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.