/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரிட்டாபட்டியில் பிற்கால பாண்டியர் காலக்கல்வெட்டு
/
அரிட்டாபட்டியில் பிற்கால பாண்டியர் காலக்கல்வெட்டு
ADDED : மே 11, 2024 05:54 AM

கருப்பாயூரணி: 'மேலுார் அரிட்டாப்பட்டியில் கி.பி. 13ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கள் காலக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது' என வரலாற்று ஆய்வாளர் தேவி, தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: அரிட்டாப்பட்டி தமிழகத்தின் முதல் பல்லுயிரிய பாரம்பரிய தலம். இங்கு 2200 ஆண்டுகள் தொன்மையான தமிழி கல்வெட்டு, கி.பி. 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர்களின் குடைவரை கோயில், கி.பி. 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு, 13ம் நுாற்றாண்டை சேர்ந்த பாண்டியர்கள் கல்வெட்டுகள் கொண்ட சிதைந்த நிலையில் இருக்கும் சிவன் கோயில், கி.பி. 7ம் நுாற்றாண்டை சேர்ந்த அரிதான லகுலீசர், வலம்புரி கணபதியின் சிற்பங்கள் உள்ளன.
தற்போது இங்கு மேலும் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இது 13ம் நுாற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் கல்வெட்டு. 7 அடி உயரம், அரை அடி நீள, அகலம் கொண்ட கல்லில் 13 வரிகள் கொண்ட தமிழ்க் கல்வெட்டு இது.
இதில் ஐந்நுாற்றுவப் பெருந்தெரு என்று கல்வெட்டில் அழைக்கப்படும் அரிட்டாப்பட்டியில்தொண்டைமான் திருச்சிற்றம்பல முடையான் பெயரில் மாணிக்கம் என்பவர் தர்மம் செய்துள்ளதை கல்வெட்டு தெரிவிக்கிறது.
ஆய்வின் போது தொல்லியல் ஆய்வாளர் அறிவுசெல்வம், வரலாற்று ஆய்வாளர் சபரிராஜன் உடனிருந்தனர்.