மதுரை: சேடபட்டி அருகே வடக்கத்தியான்பட்டியில் அட்மா திட்டத்தில் பயறுவகை பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குநர் ராமசாமி பேசியதாவது: மத்திய, மாநில திட்டங்களின் கீழ் விவசாயிகள் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்ற முன்வர வேண்டும். காரீப் பருவ பயிர்களுக்கு மஞ்சள் வண்ணஅட்டை, விளக்குபொறி, இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்த வேண்டும். இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மண் பரிசோதனை குறித்து துணை வேளாண் அலுவலர் பாண்டியன், மூலிகை பூச்சிவிரட்டி, ஐந்திலை கரைசல் தயாரிப்பு குறித்து இயற்கை வேளாண் பயிற்றுநர் வேலுசாமி, பயிர்களுக்கு தேவையான பதினாறு வகை சத்துக்கள் குறித்து தொழில்நுட்ப மேலாளர் கணேசராஜா பேசினர். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்யா, பிரித்விராஜன் செய்தனர். வேளாண் உதவி அலுவலர் குமார் நன்றி கூறினார்.