/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தமிழக கல்வித்துறையில் மத்திய அரசு நிதி ரூ.பல கோடி முறைகேடு
/
தமிழக கல்வித்துறையில் மத்திய அரசு நிதி ரூ.பல கோடி முறைகேடு
தமிழக கல்வித்துறையில் மத்திய அரசு நிதி ரூ.பல கோடி முறைகேடு
தமிழக கல்வித்துறையில் மத்திய அரசு நிதி ரூ.பல கோடி முறைகேடு
ADDED : ஆக 12, 2024 05:13 AM

மதுரை : 'தமிழக கல்வித்துறைக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஐ.சி.டி., (இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி) நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் 60 ஆயிரம் கணினி பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது,' என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லாத பட்டதாரிகள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
மதுரையில் இச்சங்க மாநில தலைவர் சசிக்குமார், பொது செயலாளர் குமரேசன் கூறியதாவது:
மத்திய அரசு சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் மாணவர்களுக்கு 'ஹைடெக் லேப்'கள் அமைக்கவும், கணினி அறிவியல் பாடம் கற்பிக்கவும், அதற்காக கணினி பயிற்சியாளர் (கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர்) நியமிக்கவும் 'சமக்ர சிக் ஷா திட்டம்' (ஒருங்கிணைந்த கல்வித்திட்டம்) மூலம் ஐ.சி.டி., நிதி ரூ.பல கோடிகள் ஒதுக்கப்படுகிறது. இந்நிதியை பயன்படுத்துவதில் மத்திய அரசின் வழிகாட்டுலை தமிழக கல்வித்துறை பின்பற்றவில்லை.
தற்போது தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் 'ஹைடெக் லேப்'கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதில் பணியாற்ற 'அட்மினிஸ்ட்ரேட்டர் கம் இன்ஸ்ட்ரக்டர்' என்ற பணியிடங்களை உருவாக்கி இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றிய 6 ஆயிரத்து 890 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் பி.எட்., கம்ப்யூட்டர் படித்தவர்கள் 200 பேர் மட்டுமே.
இப்பணியிடத்தில் நியமிக்க தகுதி பெற்றவர்கள் பி.எட்., கணினி அறிவியல் படித்தவர்களே. அவ்வகையில் 60 ஆயிரம் பேர் 15 ஆண்டுகளாக வேலைவாய்ப்புக்கு காத்திருக்கின்றனர்.
ஆனால் மூன்று, ஆறு மாதங்கள் கணினி பயிற்சி முடித்த இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களை தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு வைத்து நியமித்துள்ளது. இது முற்றிலும் மத்திய அரசின் வழிகாட்டுதல் முறைக்கு எதிரானது.
ஐ.சி.டி., நிதியில் ஒரு பள்ளியின் 'இன்ஸ்ட்ரக்டர்' பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் 'அட்மினிஸ்டேட்டர் கம் இன்ஸ்ட்ரக்டர்' பணிக்கு மாதம் ரூ.11 ஆயிரத்து 452 என குறைவாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.சி.டி., நிதியில் 'ஹைடெக் லேப்'கள் ஏற்படுத்துவது, அவற்றை பராமரிப்பது, ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்குவது என ரூ.ஆயிரத்து 76 கோடி பணிகளுக்கு தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டிய இந்த ஐ.சி.டி., நிதிப் பணிகளை தனியார் நிறுவனத்திற்கு ஏன் வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு ஒதுக்கப்படும் ஐ.சி.டி., நிதி ரூ.பல கோடியை முறையாக பயன்படுத்துகின்றனரா என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசு சிறப்பு குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.