ADDED : ஜூலை 17, 2024 12:33 AM

மதுரை : மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சியில் நிரந்தர, தினக்கூலி, தொகுப்பூதியம் அடிப்படையில் ஆயிரக்கணக்கான துாய்மை பணியாளர்கள் பணியில் உள்ளனர். இவர்களை சுகாதார ஆய்வாளர் ரமேஷ் அநாகரீகமாக பேசியதையும், பணியாளர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. நேற்று அனைத்து துாய்மை பணியாளர் சங்க மாநில நிர்வாகி அம்சராஜன் தலைமையில் மாநில தலைவர் பட்டன், பொருளாளர் முருகேசன் முன்னிலையில் 100 வார்டுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான துாய்மைப் பணியாளர்கள் மத்திய மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் துணை கமிஷனர் சரவணன், நகர்நல அலுவலர் வினோத்குமார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அதிகாரிகள் கூறுகையில் காலை 11:00 மணிக்கு மேல் பணிக்கு வருவோர் மீதும், சங்க நிர்வாகிகளின் உறவினர்கள் என கூறிக்கொண்டு பணிக்கு வராமல் சம்பளம் பெறுவதையும் பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வேலை நிறுத்த போராட்டத்திற்கு தீர்வுகாண துணை கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

