ADDED : ஜூன் 28, 2024 01:11 AM
விழிப்புணர்வு ஊர்வலம்
மதுரை: உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட மனநல திட்டம் சார்பில் உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சுகாதார இணை இயக்குநர் செல்வராஜ் துவக்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஆர்.எம்.ஓ., மாதவன் பங்கேற்றனர். மனநல டாக்டர் சந்தோஷ்ராஜ், தலைமையாசிரியர் சுப்ரமணியன் ஏற்பாடுகளை செய்தனர்.
விழிப்புணர்வு பேரணி
வாடிப்பட்டி: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போலீசார் சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமை வகித்தார். எஸ்.ஐ.,கணேஷ்குமார் முன்னிலை வலித்தார். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் துவக்கி வைத்தார். மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஏட்டு நாகராஜன் உறுதிமொழி வாசித்தார். ஏட்டுகள் பாண்டி, மதிவாணன், ஆசிரியர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி
மதுரை: லேடி டோக் கல்லுாரியில் இளங்கலை இரண்டு, மூன்றாம், முதுகலை இரண்டாமாண்டு மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தலைமையில் நடந்தது. அவர், 'கல்லுாரி விதிமுறைகள், செயல்பாடுகள் குறித்து தெரிவித்து இலக்கு நிர்ணயித்து அதை அடைய முயற்சிக்க வேண்டும்' என்றார். சிற்றாலய பொறுப்பாளர் ரஞ்சித ஜெபசெல்வி, உதவி பேராசிரியை சுபத்ரா, மாணவ பேரவை இயக்க செயலாளர் ஜெஹோவா பிலஸ்ஸி, உதவி பொறுப்பாளர் ராணி ரோசலின் பிரார்த்தனை பாடல்கள் இசைத்தனர். மாணவநல அமைப்பு பொறுப்பாளர்கள் ஆரோக்கிய சியாமளா பனியரசி, மவுனசுந்தரி, துணை பொறுப்பாளர்கள் ஜூலி பிரதிபா, எஸ்தர் எலிசபெத் கிரேஸ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
கையெழுத்து இயக்கம்
மதுரை: எஸ்.எஸ்.காலனி போலீசார் சார்பில் அரபிந்தே மீரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சர்வதேச போதைப் பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பைபாஸ் ரோடு வழியாக காளவாசல் வரை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவர்கள், போலீசார் சென்றனர். உதவி கமிஷனர் சுபக்குமார், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, பாஸ்கரன், ஆசிரியர்கள் உட்பட 150 பேர் பங்கேற்றனர். போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனர்.