/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை உட்பட 6 மாவட்ட தியேட்டர்களில் விஜயின் 'கோட்' படம் திரையிடுவதில் சிக்கல்
/
மதுரை உட்பட 6 மாவட்ட தியேட்டர்களில் விஜயின் 'கோட்' படம் திரையிடுவதில் சிக்கல்
மதுரை உட்பட 6 மாவட்ட தியேட்டர்களில் விஜயின் 'கோட்' படம் திரையிடுவதில் சிக்கல்
மதுரை உட்பட 6 மாவட்ட தியேட்டர்களில் விஜயின் 'கோட்' படம் திரையிடுவதில் சிக்கல்
ADDED : செப் 01, 2024 03:37 AM

மதுரை : மதுரை உட்பட 6 மாவட்டங்களில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் 'கோட்' படம் செப்.5ல் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலை 9:00 மணி காட்சிக்கு ரூ.700 கட்டணம் வசூலித்து தர வேண்டும் என விநியோகஸ்தரான ராகுல் வற்புறுத்துவதால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'கோட்' படம் கட்சி துவக்கிய பின் வெளிவரும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் உரிமையாளர் ராகுல் பெற்றுள்ளார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்ப நண்பர். அரசு விதிப்படி காலை 9:00 மணிக்கு படம் திரையிடப்பட உள்ளது.
இதற்கான கட்டணம் ரூ.190. 'இதை மால்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் வசூலிக்கலாம். தனி தியேட்டர்களில் ரூ.700 வசூலிக்க வேண்டும்' என ராகுல் தரப்பில் மதுரை உட்பட 6 மாவட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
உதயநிதி உதவுவாரா
இதனால் அதிருப்தி அடைந்த உரிமையாளர்கள், செப்.,5ல் படத்தை திரையிடுவதா, வேண்டாமா என குழப்பத்தில் உள்ளனர். அவர்கள் கூறியதாவது:
தியேட்டர்களின் 'சீட்' எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டு ரூ.700 கட்டணம் செலுத்தாவிட்டால் செப்.,5 காலை 9:00 மணி காட்சிக்கு 'கியூப்' ஆன் செய்ய மாட்டோம் என ராகுல் தரப்பில் மிரட்டுகின்றனர். கூடுதல் கட்டணம் வசூலித்தால் ரசிகர்களின் எதிர்ப்புக்கும், அரசின் நடவடிக்கைக்கும் நாங்கள் ஆளாக வேண்டியிருக்கும். இந்த குழப்பத்தால் ஆன்லைன் புக்கிங் செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது. அதேசமயம் மால் தியேட்டர்களில் 'புக்கிங்' முடிந்துவிட்டது.
பல தியேட்டர்கள் இன்று வணிக வளாகமாக, குடியிருப்புகளாக மாறிவிட்டன. மீதமுள்ள தியேட்டர்களை காலி செய்யும் நடவடிக்கையாகதான் இதை பார்க்கிறோம்.
ஓ.டி.டி., பிளாட்பாரங்களில் படங்களை வெளியிடுவதால் பல தியேட்டர்கள் 'ஹவுஸ்புல்' ஆவதே கிடையாது. 'ஸ்டார்' அந்தஸ்து நடிகர்கள் படங்கள் வெளியாகும்போதுதான் ஓரளவுக்கு போட்ட முதலீட்டை கையை கடிக்காமல் சிறிது லாபத்துடன் எடுக்க முடிகிறது. அதற்கும் இப்படி 'செக்' வைத்தால் எப்படி. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமா வினியோகஸ்தராக இருந்த அமைச்சர் உதயநிதி, எங்களுக்கு உள்ள பிரச்னைகள் தெரியும் என்பதால் அவரும் இதில் கவனம் செலுத்தி உதவ வேண்டும். இவ்வாறு கூறினர்.