ADDED : மே 07, 2024 05:45 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி, சதர்ன் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து புரோ கபடி சீசன் 11 போட்டிகளுக்காக, குஜராத் ஜெயன்ட்ஸ் கபடி அணிக்கான இளம் வீரர்கள் தேர்வு முகாம் நடந்தது.
முன்னாள் இந்திய கபடி அணி பயிற்சியாளரும், ஜெயன்ட் கபடி அணி தலைமை பயிற்சியாளருமான ராம்மெஹர்சிங், உதவி பயிற்சியாளர் வயிரவசுந்தரம், தெலுகு டைட்டன்ஸ் அணி துணை பயிற்சியாளர் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விளையாட்டில் பாடிச்செல்லும்போது பிடிபடாமல் தப்பிப்பது, வீரர்களை மடக்கிப்பிடிப்பது உள்ளிட்ட திறமைகளின் அடிப்படையில் 10க்கும் மேற்பட்ட இளம்வீரர்களை தேர்வு செய்தனர்.
ராம்மெஹர் சிங் கூறியதாவது: தமிழகத்தின் கிராமப்புறங்களில் திறமையான கபடி வீரர்களை கண்டறிந்து தேர்வு செய்வதற்காக இம்முகாம் நடக்கிறது. அடுத்த கட்டமாக சிறு சிறு தவறுகளை திருத்திக் கொள்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். இந்திய கபடி அணியில் தமிழக வீரர்கள் தலைமையேற்று பல்வேறு வெற்றிகள் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு சாதனை படைத்த முன்னாள் கபடி வீரர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலமாக இளம் வீரர்களை கண்டறிந்து சிறு வயதில் இருந்தே சரியான பயிற்சி வழங்கினால் இந்திய அணிக்கு திறமையான கபடி வீரர்கள் கிடைப்பர் என்றார்.