ADDED : ஆக 16, 2026 04:51 PM
மேலுார், ஆக.17 - கொட்டக்குடியில் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் போதுமான அளவில் தண்ணீரை சுத்திகரிப்பு செய்ய இயலாததால் குடிநீரை பயன்படுத்துவோரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது.
இக்கிராமத்தில் வசிக்கும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்காக 13 ஆண்டுகளுக்கு முன் ரூ. 15 லட்சத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. கிராமத்தினர் பராமரிப்பு செலவுக்காக ஒரு குடம் தண்ணீரை ரூ.3 க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் சில மாதங்களாக முழுமையாக சுத்திகரிக்கப்படாமல் தண்ணீரை வழங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அப்பகுதியினர் கூறியதாவது: சுத்திகரிப்பு இயந்திரத்தில் பில்டரை(வடிகட்டி) மாற்றாமல் முழுமையாக சுத்திகரிக்கப்படாத குடிநீரை ஊராட்சி நிர்வாகம் விநியோகம் செய்கிறது. இந்த நீரைப் பயன்படுத்துவதால் தொற்று நோய்க்கு ஆளாகிறோம். எனவே நல்ல குடிநீருக்காக பல கி.மீ.,க்கு அப்பால் உள்ள அரசப்பன்பட்டி சென்று ரூ. 5 க்கு வாங்குகிறோம். மாவட்ட நிர்வாகம் இவ் விஷயத்தில் தலையிட்டு பில்டரை மாற்றி சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், விரைவில் இயந்திரத்தில் பில்டரை மாற்றி சுத்திகரித்த தண்ணீர் வழங்கப்படும் என்றனர்.
