ADDED : ஏப் 04, 2026 06:40 PM
மதுரை: மதுரையில் சின்னம்மை பாதிப்புக்குள்ளான 2 குழந்தைகள் உட்பட 11 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர்.
நாகமலை புதுக்கோட்டையில் ஏற்கனவே 6 பேர் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
டாக்டர்கள் கூறியதாவது: குடும்பத்தில் ஒருவருக்கு சின்னம்மை வந்தால் எளிதில் மற்றவர்களுக்கும் பரவுகிறது. தோலில் தடிப்புகளுடன் காய்ச்சல் அதிகமாக இருந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும். பாதிக்கப்பட்டவர் இருமினாலோ, தும்மினாலோ காற்று மூலம் நோயின் தாக்கம் மற்றவர்களுக்கு பரவும்.
வெளியில் சென்று வந்தால் கைகளை கழுவ வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாத அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டால் 2 வாரங்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.
