/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மார்ச்சுவரியில் கூடுதலாக 24 'ப்ரீசர்கள்'
/
மார்ச்சுவரியில் கூடுதலாக 24 'ப்ரீசர்கள்'
ADDED : மே 04, 2025 05:00 AM
மதுரை :மதுரை அரசு மருத்துவமனை மார்ச்சுவரியில் ரூ.80 லட்சம் செலவில் கூடுதல் கட்டடத்தில் 24 'ப்ரீசர்கள்' வைப்பதற்கான பணி துவங்கியுள்ளது.
விபத்து, தற்கொலை, சந்தேக மரணம் போன்ற நிகழ்வுகளில் பிரச்னை ஏற்பட்டாலும் போலீசாரால் அடையாளப்படுத்தமுடியாத உடல்களும் மார்ச்சுவரியில் உள்ள 24 'ப்ரீசர்களில்' வைத்து பாதுகாக்கப்படும். மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்காக தானமாக பெறும் உடல்களை பாதுகாக்க தனியாக பத்து 'ப்ரீசர்கள்' உள்ளன. இங்கு தினமும் 15 முதல் 20 பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. மாலை 4:00 மணிக்கு மேல் பெறப்படும் உடல்கள் 'ப்ரீசரில்' வைக்கப்பட்டு மறுநாள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படுவதால் சில நேரங்களில் 'ப்ரீசரில்' இடநெருக்கடி ஏற்படுகிறது.
எனவே மார்ச்சுவரியில் கூடுதல் வசதிகள் செய்யும் வகையில் சமீபத்தில் அரசு நிதி ஒதுக்கியது. ரூ.80 லட்சம் மதிப்பில் மார்ச்சுவரி அருகிலேயே புதிய யூனிட் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதில் 24 'ப்ரீசர்கள்' அமைக்கப்படும். மேலும் தற்போது மார்ச்சுவரியில் இருந்து உடல்களை கொண்டு செல்வதற்கு அடுத்தடுத்து இரண்டு வாசல்கள் உள்ளதால் ஆம்புலன்ஸ்கள் வெளியேறும் போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் பக்கவாட்டில் புதிய கட்டடம் கட்டும் போது அதையொட்டி வாசல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் உடல்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தனி வழியில் செல்லும். மற்ற வாகனங்கள் மருத்துவமனை பின்கேட்டை தடையின்றி பயன்படுத்த முடியும்.

