/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திமில் பிடித்து திமிர் காட்டிய வீரர்கள்; தூக்கி வீசி துவம்சம் செய்த காளைகள்: அதகளமானது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
/
திமில் பிடித்து திமிர் காட்டிய வீரர்கள்; தூக்கி வீசி துவம்சம் செய்த காளைகள்: அதகளமானது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
திமில் பிடித்து திமிர் காட்டிய வீரர்கள்; தூக்கி வீசி துவம்சம் செய்த காளைகள்: அதகளமானது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
திமில் பிடித்து திமிர் காட்டிய வீரர்கள்; தூக்கி வீசி துவம்சம் செய்த காளைகள்: அதகளமானது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
ADDED : ஜன 18, 2024 07:59 AM

மதுரை : 'வந்து பார்...' என நெஞ்சை நிமிர்த்திய வீரர்களும், 'நின்னு பார்...' என திமிலை சிலுப்பிய காளைகளும் அனல் பறக்க களம் கண்ட மதுரை அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு சும்மா... அதகளப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பரவசமடையச் செய்தது.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு, முனியாண்டி கோயில் திடல் வாடிவாசலில் காலை 7:00 மணிக்கு வீரர்கள் உறுதிமொழியேற்புடன் துவங்கியது. அமைச்சர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைத்தார். அமைச்சர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.
அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், கலெக்டர் சங்கீதா, டி.ஐ.ஜி., ரம்யாபாரதி, எம்.பி.,வெங்கடேசன், எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, வெங்கடேசன், தமிழரசி முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
முதலில் முனியாண்டி கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. முதல் சுற்றில் 40 மாடுகள் களம் இறக்கிவிடப்பட்டதில் 7 காளைகளை மட்டுமே வீரர்கள் அடக்கி பரிசு வென்றனர். தலா 50 வீரர்கள் என 10 சுற்றுகளாக 1000க்கும் மேற்பட்ட மாடுகள் களம் இறக்கப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வீரர்கள் அமைச்சர் மூர்த்தி சார்பில் வழங்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினின் படம் அச்சிடப்பட்ட பனியன்கள் அணிந்திருந்தனர்.
ஆக்ரோஷமாக பார்வையில் மிரட்டி வாடிவாசல் வெளியே துள்ளிக் குதித்த மாடுகளை தாவி திமில்களை பிடித்து வீரர்கள் அடக்கினர். திமில் பிடித்த வீரர்களை துாக்கி வீசிய காளைகள் களத்தில் 'கெத்து' காட்டின.
கெத்து காட்டிய காளைகளுக்கும், தொட்டு அடக்கிய வீரர்களுக்கும் தங்கக் காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், அண்டா, மெத்தை, சேர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் விழா குழுவினரால் கொடுக்கப்பட்டன. காளைகளின் கொம்புகள் குத்தியும், துாக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்தும் வீரர்கள் பலர் காயமடைந்தனர்.
போலீஸ் உட்பட 80 பேர் காயம்
காளைகள் முட்டியதில் 28 வீரர்கள், 18 காளை உரிமையாளர்கள், 27 பார்வையாளர்கள், ஆயுதப்படை போலீஸ்காரர் செந்தில், ஆம்புலன்ஸ் உதவியாளர் என 83 பேர் காயமடைந்தனர். மாடு விரட்டியதில் பெண் காவலர் மாலதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தென் மாவட்டங்களை சேர்ந்த 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
18 காளைகளை அடக்கியகார்த்திக் முதலிடம்
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் வென்றார். அவருக்கு அமைச்சர் மூர்த்தி கார் பரிசு வழங்கினார். 17 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 2ம் இடம் வென்றார். ஆனால் அவர் தான் அதிகம் காளைகளை அடக்கியதாகவும், எண்ணிக்கையில் தவறு இருப்பதாகவும், கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்து பரிசை வாங்காமல் சென்றார். 12 காளைகளை அடக்கி எம்.குன்னத்துாரை சேர்ந்த திவாகர் 3ம் இடம் வென்றார்.
கார் வென்ற 'கட்டப்பா'
சிறந்த காளையாக திருச்சி மேலுாரை சேர்ந்த குணா என்வரின் 'கட்டப்பா' என்ற காளை முதலிடம் பிடித்தது. அக்காளைக்கு கார், பசுமாடு வழங்கப்பட்டது. மதுரை காமராஜர்புரம் சவுந்தரின் 'வெள்ளைக்காளி' காளை 2வது பரிசு வென்று, பைக்கை தட்டிச்சென்றது.
'டூப்' போடாமல் நடிப்பேன்
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட நடிகர் அருண் விஜய் கூறுகையில், அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை முதல்முறையாக பார்த்தேன். மாடு பிடி வீரர் போல் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவ்வாறு கதை கிடைத்தால் டூப் போடாமல் நடிப்பேன். ஜல்லிக்கட்டு வீரர்கள் பாதுகாப்புடன் பங்கேற்க வேண்டும் என்றார்.