ADDED : அக் 03, 2025 01:37 AM
பேரையூர் : பேரையூர் பகுதியில் பி.எஸ்.என்.எல்., இணையதள சேவை உள்ளது. அரசு நிறுவனம் என்பதால் மக்களுக்கு தரமான சேவை கிடைக்கும் என நம்பிக்கையில் பலரும் பி.எஸ்.என்.எல்., இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தனர்.
இப்பகுதியில் சமீப காலமாக பி.எஸ்.என்.எல்., இணைப்பு சரிவர கிடைப்பதில்லை. கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் தற்போது இணையத்தின் மூலமாகவே கையாளப்படுகிறது. ஒரு நாள் இணையதள சேவை துண்டிக்கப்பட்டாலும் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த நான்கு மாத காலமாக இன்டர்நெட் அடிக்கடி 'கட்' ஆவதால் வாடிக்கையாளர்கள் குழம்பி வருகின்றனர். மின்சாரம் துண்டிக்கப்படும் போதெல்லாம் தொலை தொடர்பும் துண்டிக்கப்படுகிறது. இப்பகுதி பி.எஸ்.என்.எல்அலுவலகங்களில் பேட்டரி, ஜெனரேட்டர் இல்லாததால் இவ்வாறு தடைபடுவதாக கூறுகின்றனர். தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் இதை சரி செய்ய வேண்டும்.