ADDED : ஏப் 08, 2026 04:59 AM
தரமான படமாக இருக்கும் பிரசாந்த் நம்பிக்கை
தெலுங்கில் வரவேற்பை பெற்ற 'கோர்ட்' படம் தமிழில் தியாகராஜன் இயக்கம், தயாரிப்பில் அவரது மகன் பிரசாந்த் நடிப்பில் 'ரஞ்ஜன்' என்ற பெயரில் உருவாகிறது. தயாரிப்பாளர் கதிரேசன் மகன் ஹரி, நடிகை தேவயானி மகள் பிரியங்காவும் நடிக்கின்றனர். பிரசாந்த் கூறுகையில், ''இதில் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் எங்களுக்கு நெருக்கமானவர்கள். அதுவே படத்திற்கு பலம். இப்படி ஒரு அணியை கொண்டு வந்த அப்பாவிற்கு நன்றி. அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படம் கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் ஒரு தரமான படமாக இருக்கும்'' என்றார்.-----------------------------
நஷ்ட ஈடு தந்த அக் ஷய் லாபத்தில் பங்கு கேட்ட தபு
பிரியதர்ஷன் இயக்கத்தில் அக் ஷய் குமார், தபு, வாமிகா கபி உள்ளிட்டோர் நடிப்பில் ஏப்., 16ல் வெளியாகும் ஹிந்தி படம் 'பூத் பங்களா'. இப்பட விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஏக்தா கபூர், ''அக் ஷயை வைத்து முதன்முதலில் ஒரு படத்தை தயாரித்தேன். சரியாக போகவில்லை. அக் ஷய் என்னை அழைத்து ஒரு தொகையை நஷ்ட ஈடாக தந்தார். என் 30 ஆண்டு சினிமாவில் இப்படி ஒரு நடிகரை பார்த்தது இல்லை'' என்றார். உடனே அங்கிருந்த நடிகை தபு, ''நாம் பணியாற்றிய 'க்ரூ' படம் வெற்றி பெற்றது. அதன் லாபத்தில் எப்போ பங்கு தரப்போறீங்க'' என ஏக்தாவிடம் ஜாலியாக கேட்டார்.
திரிஷா கொடுத்த திடீர் ''ஷாக்''
சினிமாவை விட்டு திரிஷா விலகுவதாக தகவல் வந்த நிலையில் இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட பதிவில், ''கேள்விப்பட்டவரை நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேனாம். ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து நேற்றுடன் இரண்டு வயதை எட்டிய 4 குழந்தைகளை வளர்க்கிறேனாம்! வேறு ஏதாவது சேர்க்கணுமா? அல்லது இன்றைய 'கற்பனைக் கதைக்கான ஒதுக்கீடு' இத்துடன் முடிந்ததா?” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
