/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்
/
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம்
ADDED : ஏப் 24, 2025 05:53 AM
மதுரை: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் மீது நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சீர்குலைக்க முடியாது
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏ.பி.வி.பி.,) தென்தமிழக இணைச் செயலாளர் விஜயராகவன்: இத்தாக்குதலை கண்டிக்கிறோம். நம் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல். பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். தாக்குதலுக்கு காரணமானோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற கோழைத்தன தீவிரவாத செயல்கள் மூலம் நம் ஒற்றுமையையும், உணர்வையும் ஒருபோதும் சீர்குலைக்க முடியாது.
நாம் ஒற்றுமையாகவும், உறுதியுடனும், பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்போம்.
கோழைத்தனமான வன்முறை
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (ஏ.ஐ.ஐ.இ.ஏ.,) மதுரைக் கோட்ட பொதுச் செயலாளர் என்.பி.ரமேஷ் கண்ணன்: அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் கொடூரமானது. இக்கோழைத்தனமான வன்முறையானது, அமைதி, மனிதநேயம், நாம் மதிக்கும் மாண்புகள் மீதான நேரடி தாக்குதல். மனித தன்மையற்ற இச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவாகவும், உறுதியாகவும் நீதியின் முன் நிறுத்த வேண்டும்.
அன்னியர்களை வெளியேற்றுக
ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநில துணைத் தலைவர் பி.சுந்தரவடிவேல்: மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தபோதும், காஷ்மீரில் ஹிந்துக்களை பயங்கரவாதிகள் கொன்று குவித்துள்ளனர். தமிழகத்திலும் உளவுத்துறை துணைகொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு பலப்படுத்த வேண்டும். தமிழகம் அமைதி மாநிலமாக திகழ, இந்திய குடியுரிமை இல்லாத அன்னிய நாட்டு பிரஜைகளை, குறிப்பாக வங்கதேச மக்களை வெளியேற்ற வேண்டும். தேச விரோத செயல், இணையதள பகிர்வுகள் மீது தேச துரோக நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீர் படுகொலையை கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.

