ADDED : ஜன 23, 2025 04:25 AM
அலங்காநல்லுார்: ''நெல் வயல் வரப்புகளில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதால் மண்வளம் பெருகும். கூடுதல் லாபம் பெறலாம்'' என அலங்காநல்லுார் வேளாண்மை உதவி இயக்குனர் தெய்வேந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பருவ மழை மூலம் கிடைக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தி வயல் வரப்பு ஓரங்களில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். வரப்புகளில் களைச்செடிகள் வளர்வது தடுக்கப்படும். தீமை செய்யும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு நன்மை செய்யும் பூச்சிகள் அதிகரிக்கும்.
இதற்கு தேவையான பயறு வகை விதைகள், விதை நேர்த்திக்கு தேவையான ரைசோபியம், சூடோமோனாஸ், டிரைகோடெர்மா, விரிடி போன்றவை அலங்காநல்லுார் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கிறது. அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வரப்பு பயிர்கள் சாகுபடிக்கு தேவையான விதைகள் 50 சதவீத மானியத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

