/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆளுங்கட்சி ஆதரவு தனியார் துாய்மை பணி ஒப்பந்த நிறுவனத்தை... வெளியேத்துங்க: மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., 'கூட்டணி' போர்க்கொடி
/
ஆளுங்கட்சி ஆதரவு தனியார் துாய்மை பணி ஒப்பந்த நிறுவனத்தை... வெளியேத்துங்க: மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., 'கூட்டணி' போர்க்கொடி
ஆளுங்கட்சி ஆதரவு தனியார் துாய்மை பணி ஒப்பந்த நிறுவனத்தை... வெளியேத்துங்க: மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., 'கூட்டணி' போர்க்கொடி
ஆளுங்கட்சி ஆதரவு தனியார் துாய்மை பணி ஒப்பந்த நிறுவனத்தை... வெளியேத்துங்க: மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., 'கூட்டணி' போர்க்கொடி
ADDED : செப் 26, 2025 05:23 AM

மதுரை: ஆளுங்கட்சி குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆதரவுடன் சென்னையை சேர்ந்த 'அவர் லேண்ட்' நிறுவனம் மதுரை உட்பட பல மாநகராட்சிகளில் துாய்மைப்பணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 'மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் துாய்மைப் பணி மேற்கொள்ளும் இந்நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்' என மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., ம.தி.மு.க., மார்க். கம்யூ., வி.சி., கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது அரசியல் ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டம் மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா தலைமையில் நடந்தது. துணைமேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஜெயராஜ், தி.மு.க.,: மழைக்காலம் துவங்கியுள்ளது. துார்வாரப்பட்ட கால்வாய்களில் நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
சோலைராஜா, அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர்: மாநகராட்சி சொத்துவரி முறைகேடு குறித்த சிறப்பு குழுவின் விசாரணையின் நிலவரம் என்ன. ஓராண்டுக்கு முன் நகரமைப்பு குழுவினர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா. அவர்களால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா. துாய்மைப் பணியாளர்களுக்கும் 'அவர் லேண்ட்' நிறுவனத்திற்கும் இடையேயான மோதலுக்கு தீர்வு காணவேண்டும். மழைநீர் கால்வாய்கள் துார்வார வேண்டும். பம்பிங் ஸ்டேஷன்களில் ஜெனரேட்டர், மாற்று மோட்டார் வசதி வேண்டும். பெரியாறு கூட்டுக்குடிநீர் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்படுகின்றன. இத்திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்.
துணைமேயர்: மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் கழிவு நீர் தேங்குகிறது. திறந்த வெளி வாய்க்கால் உள்ளது. பல இடங்களில் பாதாளச் சாக்கடையில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளன. சிறப்பு நிதி ஒதுக்கி சரிசெய்ய வேண்டும். 'அவர் லேண்ட்' நிறுவனம் விதிமுறைகளை பின்பற்றவில்லை. ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை எடுங்கள்.
அபிேஷக், உதவி நகர் நல அலுவலர்: நிரந்தரம், தினக்கூலி ஒப்பந்தம், தொகுப்பூதியம் என 4 பிரிவுகளில் துாய்மைப் பணியாளர்கள் உள்ளனர். 8 மணிநேரம் வேலையை நடைமுறைப்படுத்த நிறுவனத்திற்கு சவாலாக உள்ளது. போதிய வாகனங்கள் ஒதுக்கி குப்பை அள்ளுவது நிறுவனத்தின் பொறுப்பு.
ஜெயராஜ்: வார்டுதோறும் கவுன்சிலர்கள் சிபாரிசில் துாய்மைப் பணியாளர்களை நியமித்தால் போராட்டங்களை தவிர்க்கலாம்.
சோலைராஜா: நிரந்தர பணியாளர்களுக்கு மாநகராட்சி சம்பளம் வழங்குகிறது. ஆனால் அவர்கள் தனியார் நிறுவனத்திற்காக பணியாற்றுகின்றனர்.
கமிஷனர்: நிரந்தர துாய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சியில் வேறு பணிகள் உள்ளன. பற்றாக்குறை இருக்கும்போது சில இடங்களில் பயன்படுத்தப்படுகின்றனர்.
கார்த்திகேயன், காங்.,: சுற்றுச்சூழல் பூங்காவில் கமிஷனரின் பார்வையில் படும் பகுதி மட்டும் பசுமையாக பராமரிக்கப்படுகிறது. பின்பகுதியில் கழிவு தேங்கி கிடக்கி கிடக்கிறது. எனது வார்டிலும் ஒரு பகுதியில் பணிகளே நடக்கவில்லை. ஓட்டுக்கேட்டு மக்களிடம் செல்ல முடியாத சூழல் உள்ளது.
குமரவேல், மார்க். கம்யூ.,: மாநகராட்சிக்கு கீழ் 'அவர் லேண்ட்' நிறுவனம் உள்ளதா. நிறுவனத்தின் கீழ் மாநகராட்சி உள்ளதா. 23 துாய்மைப் பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்தது. விதிமீறும் இந்நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
முனியாண்டி, வி.சி.,: துாய்மைப் பணியாளர்கள் 23 பேர் நீக்கத்தை ஏற்க முடியாது. 'அவர் லேண்ட்' நிறுவனம் விதிமீறினால் ஏன் ரத்து செய்ய கூடாது. அரசுக்கு நெருக்கடி உள்ளதா.
இவ்வாறு விவாதம் நடந்தது.