/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி கூட்ட விவகாரத்தில் மார்க்சிஸ்டுகளுக்கு பணிந்தது தி.மு.க.,; காங்கிரஸ் பாடத்தால் கூட்டணி பயத்தில் கப்சிப் உத்தரவு
/
மாநகராட்சி கூட்ட விவகாரத்தில் மார்க்சிஸ்டுகளுக்கு பணிந்தது தி.மு.க.,; காங்கிரஸ் பாடத்தால் கூட்டணி பயத்தில் கப்சிப் உத்தரவு
மாநகராட்சி கூட்ட விவகாரத்தில் மார்க்சிஸ்டுகளுக்கு பணிந்தது தி.மு.க.,; காங்கிரஸ் பாடத்தால் கூட்டணி பயத்தில் கப்சிப் உத்தரவு
மாநகராட்சி கூட்ட விவகாரத்தில் மார்க்சிஸ்டுகளுக்கு பணிந்தது தி.மு.க.,; காங்கிரஸ் பாடத்தால் கூட்டணி பயத்தில் கப்சிப் உத்தரவு
UPDATED : பிப் 10, 2026 02:13 PM
ADDED : பிப் 10, 2026 06:18 AM

மதுரை: மதுரையில் 'மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி துணைமேயர் நாகராஜன் தலைமையில் நடத்த விடக் கூடாது' என வீராப்பு காட்டி 3 மாதங்களாக நடத்தாமல் இழுத்தடித்த உள்ளூர் தி.மு.க.,வின் 'அரசியல் தந்திரம்' பலிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவால் இன்று (பிப்.10) துணைமேயர் தலைமையில் கூட்டத்தில் பங்கேற்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சொத்துவரி முறைகேடு வழக்கு விவகாரத்தில் 3 மாதங்களுக்கு முன் மேயர் இந்திராணி பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதில் யார் ஆதரவாளரை புதிய மேயராக தேர்வு செய்வது என மதுரை ஆளுங்கட்சி அரசியல் புள்ளிகளுக்கு இடையே 'ஈகோ' யுத்தம் ஏற்பட்டது.
தி.மு.க.,வுக்கு செக்
இதனால் கடுப்பான தி.மு.க., தலைமை புதிய மேயர் தேர்வு விஷயத்தை கிடப்பில் போட்டது. அதேநேரம் துணைமேயர் நாகராஜன் தலைமையில் கூட்டத்தை நடத்தவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டை உள்ளூர் தி.மு.க., எடுத்தது.
ஆனால் தி.மு.க.,வுக்குள் நடக்கும் உட்கட்சி அரசியலை சாதகமாக்கிய மார்க்சிஸ்ட் கட்சி, தனது 'அரசியல்' தந்திரத்தால் 'மெஜாரிட்டி' கவுன்சிலர்களை கொண்ட தி.மு.க.,வுக்கு 'செக்' வைத்து கவுன்சில் கூட்டத்தை நடத்தும் சூழலை உருவாக்கியது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்., குறித்தும், அக்கட்சி எம்.பி.,க்கள் குறித்தும் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., தளபதி விமர்சித்ததால் கூட்டணிக்குள் முட்டல் மோதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஒரு மாநகராட்சி கூட்டத்திற்காக மார்க்சிஸ்ட் கட்சியிடமும் மோதலை வெளிப்படுத்தினால் அது ஒட்டு மொத்த கூட்டணியையும் பாதிக்கலாம் எனக்கருதி கடைசி நேரத்தில் (நேற்று மாலை) தி.மு.க., தலைமை ஓர் உத்தரவை பிறப்பித்தது. இதன்படி 3 மாவட்ட செயலாளர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்களிடம் 'துணைமேயர் நாகராஜன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். சாக்கு போக்கு கூறி 'ஆப்சென்ட்' ஆனால் தலைமையின் நடவடிக்கை பாயும்' என எச்சரித்துள்ளனர். இதனால் கடைசி நேரத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் நொந்து போயுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் 'கமென்ட்'
அவர்கள் கூறியதாவது: மார்க்சிஸ்ட் 'அரசியல்' செய்தபோதே அதற்கு பதிலடி தரும் வகையில் தி.மு.க.,வும் செயல்பட்டு புதிய மேயரை தேர்வு செய்து கெத்து காட்டியிருக்கலாம். அதற்கேற்ப நீதிமன்ற உத்தரவுக்கும், கூட்டம் நடத்துவதற்கும் 10 நாட்களுக்கு மேல் காலஅவகாசம் இருந்தது. இதுகுறித்து ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் முதல்வர் தரப்பு வரை வலியுறுத்தினர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.
இதற்கு 'பஞ்சுமூடை கோடவுனிலேயே இருந்திருக்கலாம்' என்பதைப் போல, மூன்று மாதங்களாக இழுத்தடிக்காமல் முதல் மாதத்திலேயே மார்க்சிஸ்ட் தலைமையில் கவுன்சில் கூட்டம் நடத்த உள்ளூர் தி.மு.க.,வினர் அனுமதித்திருக்கலாமே என எதிர்க்கட்சிகள் 'கமென்ட்' அடிக்கும் நிலைக்கு ஆளாகி விட்டோம் என்றனர்.

