ஓட்டுச் சாவடிகளில் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுங்களேன் :தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எதிர்பார்க்கிறாங்க
ஓட்டுச் சாவடிகளில் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யுங்களேன் :தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எதிர்பார்க்கிறாங்க
ADDED : ஏப் 19, 2026 10:20 PM
மதுரை: ''மதுரையில் ஓட்டுப்பதிவின்போது மனஉளைச்சலின்றி பணியாற்றுவதற்கான வசதி, பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்'' என ஆசிரியர், அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் அரசு பள்ளி, கல்லுாரி, அங்கன்வாடிகளில் 3 ஆயிரத்து 79 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 14 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்கள் ஏப்.22 மதியமே ஓட்டுச் சாவடிக்கு சென்றுவிட வேண்டும்.
இரவு அங்கு தங்க வேண்டும். ஆனால் பல அரசு பள்ளிகளில் அமைக்கப்படும் ஓட்டுச்சாவடிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி, பாதுகாப்பு இல்லாத சூழல் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற பிரச்னைக்கு இத்தேர்தலில் தீர்வுகாண வேண்டும் என தற்போது போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: ஓட்டுப்பதிவின்போது பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவுக்கு கூட நேரம் ஒதுக்கப்படுவதில்லை. தேர்தல் பணிக்காக 20 சதவீதம் பேர் காத்திருப்போர் பட்டியலில் தயார் நிலையில் வைக்கப்படுவர். அவர்கள் தாசில்தார் அலுவலகம், பயிற்சி மையத்தில் சும்மாவே இருக்க வேண்டும். அவர்கள் உழைப்பு வீணடிக்கப்படுகிறது.
இதற்கு பதில் ஓட்டுச்சாவடிக்கு ஒருவர் வீதம் கூடுதலாக அனுப்பினால் சரியான நேரத்தில் உணவு சாப்பிடவும், இயற்கை உபாதையின்போது பணிமாற்றிக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும். இதுபோல் ஓட்டுச்சாவடி மையங்கள் விபரம் மதியத்திற்கு மேல் தான் தெரிவிக்கப்படுகிறது.
அலைபேசியில் 'மெசேஜ்' மூலம் ஏப்.22 காலையே தெரிவித்தால் அதற்கேற்ப திட்டமிட்டு செல்ல முடியும். ஓட்டுப்பதிவு முடிந்து நள்ளிரவுக்கு மேல் வீடு திரும்புவோருக்கு வாகனம் ஏற்பாடு செய்து பாதுகாப்பு அளித்தால் மனஉளைச்சல் தவிர்க்கப்படும். தேர்தல் அதிகாரியான கலெக்டர் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
