/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
/
திருமங்கலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : செப் 03, 2025 07:20 AM
திருமங்கலம் : திருமங்கலத்தில் உசிலம்பட்டி ரோட்டின் இருபுறமும் சாலையோர வியாபாரிகள் நடு ரோடு வரை கடைகளை பரப்பி வியாபாரம் செய்து வந்தனர்.
அந்த கடைகளுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கும் வசதியின்றி கம்பிகளால் தடுப்பு அமைத்திருந்தனர். இதனால் உசிலம்பட்டி ரோடு கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.
அந்த ரோட்டில் அரசு பெண்கள் பள்ளி, தனியார் பள்ளி என 2 பள்ளிகள் உள்ளன.
காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வது சவாலான விஷயம்.
தற்போது பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணிகள் நடப்பதால் உசிலம்பட்டி, செக்கானுாரணி வழியாக செல்லும் பஸ்களும் நெரிசலான உசிலம்பட்டி ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்று வந்தன. இவ்வாறு பல வகையிலும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தது. போலீசார் பணியில் இருந்தாலும் நெரிசலை கட்டுப்படுத்த இயலவில்லை.
இந்நிலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் உசிலம்பட்டி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கினர். நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை, போலீசார் வந்தனர். சாலையோர வியாபாரிகள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை எடுப்பதாக தெரிவித்து கடைகளை அகற்றினர்.
ஆனால் பெரிய கடையினர் தங்கள் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றவில்லை. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் உசிலம்பட்டி ரோட்டை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.