/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் லாரி தண்ணீருக்கு முற்றுப்புள்ளி
/
மதுரை அரசு மருத்துவமனையில் லாரி தண்ணீருக்கு முற்றுப்புள்ளி
மதுரை அரசு மருத்துவமனையில் லாரி தண்ணீருக்கு முற்றுப்புள்ளி
மதுரை அரசு மருத்துவமனையில் லாரி தண்ணீருக்கு முற்றுப்புள்ளி
ADDED : ஜன 30, 2026 07:12 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் மாநகராட்சி மூலம் கூடுதல் பைப்லைன் இணைக்கப்பட்டதால் தினமும் ரூ.பலஆயிரம் செலவில் வாங்கப்பட்ட லாரி தண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பழைய வளாகத்திற்கு தினமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. தீவிர விபத்து பிரிவு(டி.சி.சி.,) அவசர சிகிச்சை வளாகத்திற்கு 2 லட்சம், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு(எஸ்.எஸ்.பி.,) 3 லட்சம் என தினமும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. போர்வெல் மூலம் தினமும் 2.70 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. மற்ற தேவைகளுக்கு லாரி தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பாக ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் மணலுார் வைகையாற்றில் இருந்து தெப்பக்குளம் வழியாக பழைய வளாகம், டி.சி.சி., வளாகத்தை இணைக்கும் வகையில் பைப்லைன்கள் பொருத்தப்பட்டன. ஆனால் பம்பிங் திறன் குறைவாக இருந்ததால் தினமும் 60ஆயிரம் மு தல் 70ஆயிரம் லிட்டர் தண்ணீரே கிடைத்தது. மீண்டும் லாரிகள் மூலம் கூடுதலாக விலை கொடுத்து வாங்கப்பட்டது.
இந்நிலையில் ரூ.21 லட்சம் செலவில் முல்லைப்பெரியாறு கூட்டு குடிநீர்த்திட்டத்தின் கீழ் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி வழியாக ராஜாஜி பூங்கா வரை செல்லும் பைப்லைன் வழியாக எஸ்.எஸ்.பி., வளாகத்திற்கு தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. ஒரு லோடு லாரித்தண்ணீருக்கு ரூ.1100 வீதம் தினமும் ரூ.65ஆயிரம் வரை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு குடிநீர் வசதியும் இல்லாததால் புதிதாக இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இயந்திரம் அமைப்பதற்கான எலக்ட்ரிக்கல் வேலைகள் நடக்கின்றன. ஒரு மணி நேரத்தில் 1000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்க முடியும் என்பதால் இனி நோயாளிகள் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை. மேலும் டி.சி.சி., வளாகத்திற்கு ஒன்று, பழைய வளாகத்திற்கு மூன்று குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன.

