ADDED : ஆக 12, 2026 05:54 PM
வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி அண்ணா நகரில் மதுரை மெயின் ரோட்டோரம் குப்பை, இறைச்சி கழிவுகளை அதிகளவில் கொட்டி குவிக்கின்றனர்.
இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ரோட்டில் செல்வோர் மூக்கை பொத்திக் கொண்டு ஓடும் நிலை உள்ளது. சமயநல்லுார், ஊர்மெச்சிகுளம் ரோட்டோரம் ஞாயிற்று கிழமையில் அதிக மீன் வியாபாரம் நடக்கிறது. மீன் உள்ளிட்ட கழிவுகளை ரோட்டோரத்தில் கொட்டி செல்கின்றனர்.
பழைய துணிகள், துணி மூடைகள் கழிவுகளையும் அங்கு வீசுகின்றனர். கோழிக் கழிவுகள் பல வாரங்களாக கொட்டப்படுகிறது. தினமும் பேரூராட்சி நிர்வாகம் லாரியில் இப்பகுதியில் குப்பை, கழிவுகளை சேகரிக்கின்றனர். அதேசமயம் ரோட்டோரத்தில் குப்பை கொட்டுவோர் நிறுத்தாமல் தொடர்ந்து கொட்டுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் குப்பை அகற்றுவதுடன், முறையாக அவற்றை தொட்டியில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
