ADDED : ஜன 13, 2026 06:24 AM
மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் விலை அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பச்சைமொச்சை பயறின் விலை நேற்று மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் கிலோ ரூ.40 முதல் ரூ.45 க்கு விற்கப்பட்டது.
தை முதல் தேதியில் பிதுக்குபயறு குழம்பு வைக்கும் பழக்கம் மதுரையில் உள்ளது. உள்ளூரில் விளையும் பச்சை மொச்சை காயின் தோலுரித்து பச்சை மொச்சையை தண்ணீரில் ஊறவைப்பர். மறுநாள் அதை தோலுரித்து அதில் குழம்பு செய்வர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டியே பச்சை மொச்சை சாகுபடியாகும்.
இந்தாண்டு உள்ளூர் வரத்து குறைந்த நிலையில் வெளிமாநில வரத்து கைகொடுத்துள்ளது. குறிப்பாக ஆந்திர மொச்சை வரத்து அதிகரித்ததால் கிலோ ரூ.80 வரை விற்க வேண்டிய பச்சைமொச்சை தற்போது ரூ.40 - ரூ.45 வரையே விற்கப்படுகிறது. பொங்கலுக்கு அதிகபட்சமாக கிலோ ரூ.50 வரை அதிகரிக்கலாம்.
கத்தரிக்காய் கிலோ ரூ. 30 - ரூ. 40க்கும் வெண்டை 40, பாகல் 50 - 60, சிறிய வெங்காயம் 30 - 50, பெரிய வெங்காயம் 15 - 40, முருங்கை பீன்ஸ் 70 - 90, அவரைக்காய் 30 - 40, முட்டைகோஸ் 20, கேரட் 35க்கு விற்கப்பட்டது. தரத்தை பொறுத்து பட்டர்பீன்ஸ் 90 முதல் 180க்கும் சோயா 70 - 100 வரையும் விற்பனையானது. சோயாபீன்ஸ்க்கு இணையான விலையில் விற்கப்படும் பச்சைபட்டாணி வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.40 - 100க்கு விற்கப்பட்டது.
உள்ளூரில் உற்பத்தியாகும் முருங்கைக்காய் வரத்து குறைவால் கிலோ ரூ.300க்கு விற்கிறது. காயின் தரமும் குறைவாக உள்ளது. 70 முதல் 80 கிலோ எடையுடைய 50 மூடை முருங்கைக்காய்கள் வரவேண்டிய இடத்தில் வெறும் 50 கிலோ அளவிற்கே கிடைக்கிறது.

