/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சிக்கு 'அல்வா'! தனியாரிடம் சிக்கிய குடியிருப்புகளுக்கான வாடகை; பல்லாண்டாக தொடரும் வருவாய் இழப்பால் அதிர்ச்சி
/
மாநகராட்சிக்கு 'அல்வா'! தனியாரிடம் சிக்கிய குடியிருப்புகளுக்கான வாடகை; பல்லாண்டாக தொடரும் வருவாய் இழப்பால் அதிர்ச்சி
மாநகராட்சிக்கு 'அல்வா'! தனியாரிடம் சிக்கிய குடியிருப்புகளுக்கான வாடகை; பல்லாண்டாக தொடரும் வருவாய் இழப்பால் அதிர்ச்சி
மாநகராட்சிக்கு 'அல்வா'! தனியாரிடம் சிக்கிய குடியிருப்புகளுக்கான வாடகை; பல்லாண்டாக தொடரும் வருவாய் இழப்பால் அதிர்ச்சி
ADDED : ஆக 20, 2025 01:52 AM

மதுரை: மதுரை மாநகராட்சியின் பல குடியிருப்புகளை தனியார் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடுவதாகவும், அவற்றிலிருந்து பல ஆண்டுகளாக வாடகை வசூலிக்க முடியவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் பயன்பெறும் வகையில் 30 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் கட்டப்பட்டன. தல்லாகுளம், தமுக்கம் பின்புறம், கரும்பாலை, மதிச்சியம், சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், அருள்தாஸ்புரம், பொன்னகரம், மேலவாசல், சந்தைப்பேட்டை, கோச்சடை உட்பட பழைய 78 வார்டுகளிலும் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தற்போதும் உள்ளன.
இவற்றில் சில வீடுகளில் தற்போது மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் வசிக்கின்றனர். வீட்டு வாடகை அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. அதேசமயம் பெரும்பாலான குடியிருப்புகள் சம்பந்தமே இல்லாத சிலரால் ஆக்கிரமித்து, சொந்தம் கொண்டாடப்படுகிறது. அவர்கள் வாடகையும் செலுத்துவதில்லை. சிலர் '20 ஆண்டுகளாக குடியிருக்கிறோம்; வீடு எங்களுக்கே சொந்தம்' என நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அருள்தாஸ்புரம் மேல்நிலைத் தொட்டிக்கு எதிரே உள்ள 2 வீடுகள் தனியாரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: மாநகராட்சி சொத்துகளை பல இடங்களில் தனியார் ஆக்கிரமித்து அனுபவிக்கின்றனர். ஜூலையில் மண்டலம் 3ல் 54 வது வார்டு தெற்குவெளி வீதி குப்புப்பிள்ளை தோப்பு 2வது தெருவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் தனியார் பிடியில் இருந்த மாநகராட்சி சமுதாயக் கூடம் கமிஷனர் சித்ரா நடவடிக்கையால் மீட்கப்பட்டது.
அதுபோல் பல வார்டுகளில் மாநகராட்சி குடியிருப்புகள் தனியாரிடம் சிக்கியுள்ளன. ஆரம்பத்தில் மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் குடியிருந்த நிலையில், காலப்போக்கில் சம்பந்தம் இல்லாதோரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. அவற்றை உள்வாடகைக்கு விட்டு 'கல்லா' கட்டுகின்றனர். ஆனால் மாநகராட்சிக்கு வாடகை செலுத்துவதில்லை. இதனால் பல ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி மத்திய வருவாய் பிரிவு அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்து, தனியார் பிடியில் இருந்து மீட்கவும், வீடுகளை விற்பனை செய்திருந்தால் குற்ற நடவடிக்கை எடுக்கவும் கமிஷனர் சித்ரா முயற்சிக்க வேண்டும் என்றனர்.