
மேலுார்: மதுரை பசுமை நடை பயணம் அமைப்பின் உறுப்பினர்கள் 300 பேர் கிடாரிப்பட்டி மலையில் நடை பயணம் மேற்கொண்டனர்.
உறுப்பினர்களுக்கு அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், செயலாளர் சுந்தர், சமூக ஆர்வலர் செந்தில்குமார் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமண சிற்பங்கள், தமிழிய, வட்ட எழுத்துக்கள் பற்றி எடுத்துரைத்தனர்.
அமைப்பாளர் கூறியதாவது: இம்மலையில் 13 இடங்களில் 2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிய, வட்டெழுத்து கல்வெட்டுகளில் மதிரை என்ற சொல் குறிப்பிட ப்பட்டுள்ளது. தொல்குடிகள் வரைந்த குகை ஓவியங்கள், குகைத்தளங்கள், வற்றாத சுனை உள்ளது .
இங்கு கல்வெட்டில் பொன் கொல்வன், மதுரை உப்பு வணிகன், மதுரை அறுவை வணிகன் என பல்வேறு வணிகர்கள் சேர்ந்து படுக்கைகள் அமைத்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர். பாறை ஓவியங்கள் சமணர்கள் வருகைக்கு முன்பே தொல்குடிகள் வாழ்ந்துள்ளதை கூறுகிறது.
செம்பாறங்கல்லை பொடியாக்கி இலைச் சாறு கொண்டு மிருக வால் முடியை துாரிகையாக்கி ஓவியங்கள் வரைந்துள்ளனர். தீர்த்தங்கரர் உருவத்துடன் கல்வெட்டும் உள்ளது. மாவட்டத்தின் பல மலைகளில் சமண துறவியான அச்சணந்தி செய்த சிலைகள் உள்ளது , என்றார்.

