/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்': பஸ், தண்ணீர் வசதியில்லாத தோப்பூர் மருத்துவமனை ; 2 கி.மீ.,க்கு உணவு வாங்க நோயாளிகள் அலையும் பரிதாபம்
/
'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்': பஸ், தண்ணீர் வசதியில்லாத தோப்பூர் மருத்துவமனை ; 2 கி.மீ.,க்கு உணவு வாங்க நோயாளிகள் அலையும் பரிதாபம்
'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்': பஸ், தண்ணீர் வசதியில்லாத தோப்பூர் மருத்துவமனை ; 2 கி.மீ.,க்கு உணவு வாங்க நோயாளிகள் அலையும் பரிதாபம்
'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்': பஸ், தண்ணீர் வசதியில்லாத தோப்பூர் மருத்துவமனை ; 2 கி.மீ.,க்கு உணவு வாங்க நோயாளிகள் அலையும் பரிதாபம்
UPDATED : பிப் 20, 2026 05:08 AM
ADDED : பிப் 20, 2026 05:06 AM

மதுரை: தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை செல்வதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பஸ்வசதி உள்ளதால் நோயாளிகள் ஆட்டோவுக்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு ஈடாக புகழப்பட்ட இம்மருத்துவமனை இன்று அடிப்படை வசதிகளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பே தோப்பூரில் காசநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டாலும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. அந்த பகுதி முழுவதும் இன்னும் வளர்ச்சியடையாத நிலையில் ஒரு கட்டடம் கூட புதிதாக எழும்பவில்லை. இதனால் அங்கு பஸ் ஸ்டாப், கடைகள் எதுவும் இல்லை. காலை, மதியம், மாலை என 3 வேளை மட்டுமே பஸ்கள் இங்கு நின்று செல்கின்றன. மற்ற நேரங்களில் நோயாளிகள் பஸ்சில் வரமுடியாததால் ஆட்டோவில் மருத்துவமனைக்கு வருகின்றனர். இங்கு நர்ஸ்கள், பிற பணியாளர்கள் உள்ளிட்ட 200 பேர் வேலை செய்கின்றனர். அவர்களும் குறிப்பிட்ட நேரத்தை பஸ்சை தவறவிட்டால் ஆட்டோவில் தான் வரவேண்டியுள்ளது.
இங்கு பெரிய கிணறுடன் மூன்று போர்வெல்கள் உள்ளன. தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அமைப்பதற்கு முன்பதாக இங்கு நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருந்தது. அங்கு தண்ணீர் அதிகம் எடுக்கப்படுவதால் காசநோய் மைய போர்வெல்களில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பைப்லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் காசநோய் மருத்துவமனையில் இதுவரை பைப்லைன் பொருத்தவில்லை. இது தொற்றுநோய் மையம் என்பதால் அதிக இடைவெளி விட்டு வார்டுகளில் நோயாளிகள் பராமரிக்கப்படுகின்றனர். வார்டுகளுக்கு இடையிலுள்ள பகுதிகளில் மரங்கள், செடி, கொடிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றுக்கான தண்ணீர் தேவையும் அதிகமாக உள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பைப்லைன் அமைத்து குடி நீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
கேண்டீன் தேவை
இங்குள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனை சார்பில் அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறது. நோயாளிகளின் உறவினர்கள் டீ வாங்குவதற்கோ உணவு சாப்பிடுவதற்கோ 2 கி.மீ., சுற்றளவில் எந்த ஓட்டலும் இல்லை. எனவே மகளிர் சுயஉதவிக் குழு மூலம் கேண்டீன் அமைக்க மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். வயிற்றுப்போக்கு நோயாளிகளுக்கான 50 படுக்கைகளுடன் கூடிய வார்டு மட்டும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் பொருத்தப்பட்டுள்ளதால் வெப்பம் நேரடியாக நோயாளிகளைத் தாக்குகிறது.
ஏற்கனவே வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்படுவோருக்கு இது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தற்காலிகமாக தெர்மாகோல் அட்டைகளை மேலே வைத்து வெப்பத்தை குறைத்துள்ளனர். ஆனாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட ஆரம்பித்தாலும் பஸ் வசதி இல்லாவிட்டால் நோயாளிகள் வந்து செல்ல முடியாது.
எனவே தோப்பூர் காசநோய் மருத்துவமனை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்வதற்கு ஏற்ப திருமங்கலம், ஆரப்பாளையம், பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.

