/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல்லில் ஏக்கருக்கு 2 டன் என்ற அளவை கொஞ்சம் கூட்டுங்க; வீரிய ரகங்களால் விளைச்சல் அதிகரிப்பு
/
நெல்லில் ஏக்கருக்கு 2 டன் என்ற அளவை கொஞ்சம் கூட்டுங்க; வீரிய ரகங்களால் விளைச்சல் அதிகரிப்பு
நெல்லில் ஏக்கருக்கு 2 டன் என்ற அளவை கொஞ்சம் கூட்டுங்க; வீரிய ரகங்களால் விளைச்சல் அதிகரிப்பு
நெல்லில் ஏக்கருக்கு 2 டன் என்ற அளவை கொஞ்சம் கூட்டுங்க; வீரிய ரகங்களால் விளைச்சல் அதிகரிப்பு
ADDED : பிப் 03, 2026 06:42 AM

மதுரை: நெல் கொள்முதல் மையத்தில் ஏக்கருக்கு 2 டன் அளவிற்கே நெல் கொள்முதல் செய்யப்படும் என்கிற வரம்பை 2.25 முதல் 2.5 டன் அளவாக அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டத்திற்கான சம்பா சீசனில் ஒரு லட்சத்து 17ஆயிரம் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. பிப்., முதல் வாரம் முதல் மார்ச் முதல் வாரத்திற்குள் அறுவடை பணிகள் முடிந்து 2 லட்சத்து 26ஆயிரம் டன் வரை நெல் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்காக 123 கொள்முதல் மையங்களுக்கு கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 22 மையங்கள் திறக்கவும் வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையங்களில் கொள்முதல் மையங்களில் ஏக்கருக்கு 2 டன் அளவிற்கே நிர்ணயம் செய்யப்படுவதால் கூடுதலாக விளைந்த நெல்லை விற்பது சிரமமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது: 40 கிலோ அளவுள்ள 48 மூடை என்ற கணக்கில் ஒரு ஏக்கருக்கான நெல்லை மையத்தில் நிர்ணயம் செய்கின்றனர். தற்போதுள்ள நெல் ரகங்கள் எல்லாம் உயர் விளைச்சல் ரகங்கள் என்பதால் ஒரு ஏக்கருக்கு 2.25 டன் முதல் 2.5 டன் அளவிற்கு நெல் விளைகிறது. ஒரு விவசாயி குறைந்தது 3 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தால் கூடுதலாக 30 மூடைகள் நெல் கிடைக்கிறது. இவற்றை விற்பதற்கென தனி வியாபாரியைத் தேடிக் கொண்டிருக்க முடிகிறது. கொள்முதல் மையத்தில் நெல்லை எடையிட்டால் உடனடியாக பணம் கிடைத்து விடும். ஏக்கருக்கான டன் அளவை மாநில அளவில் மீண்டும் பரிசோதித்து நிர்ணயம் செய்ய வேண்டும்.
பிப். முதல்வாரத்தில் 50 சதவீத விவசாயிகள் அறுவடைப் பணிகளை தொடங்கி விடுவர். மையத்தில் எடை இயந்திரம், சாக்கு எல்லாம் இருந்தாலும் ஆட்கள் நியமிப்பதில் தான் இழுபறியாக உள்ளது. எனவே தாமதமின்றி ஆட்களை நியமிக்க வேண்டும். ஒருமாத காலத்திற்குள் அனைத்து நெல்லையும் எடையிட வேண்டும் என்பதால் தினமும் மையம் செயல்படும் நேரத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றனர்.
வேளாண் இணை இயக்குநர் முருகேசனிடம் கேட்டபோது, ''சிட்டா, அடங்கலுடன் வரும் விவசாயிகளிடம் கறாராக இவ்வளவு மூடை என்று சொல்வதில்லை. வியாபாரிகள் வருவதை தடுக்கவே நிபந்தனை விதிக்கப்படுகிறது. கூடுதலாக ஒருசில மூடைகள் வருவதை தடுப்பதில்லை'' என்றார்.

