தனியாளாக விவசாயி தர்ணா நெல்மூடைகளை அடுக்கி மறியல்
தனியாளாக விவசாயி தர்ணா நெல்மூடைகளை அடுக்கி மறியல்
ADDED : ஜூலை 03, 2026 12:30 AM

சோழவந்தான்: நாச்சிகுளத்தில் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வராததால் விவசாயி தனி ஒருவனாய் ரோடு மறியல் செய்தார்.
இங்கு 2ம் போகத்தில் 500 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. 4 மாதங்களுக்கு முன் அறுவடை பணிகள் தொடங்கியதால் மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டு பணிகள் நடந்தன. நாச்சிகுளம் மையத்திற்கு 12 ஆயிரத்திற்கும் கூடுதலான மூடைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கொள்முதல் பணிகள் முடிந்து ஒரு மாதமாகியும் விவசாயிகள் சிலருக்கு பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி பழனியாண்டி 60, தனி ஒருவனாய் சோழவந்தான் - பள்ளப்பட்டி ரோட்டில் நெல்மூடைகளை அடுக்கி கட்டிலில் அமர்ந்து ரோடு மறியல் செய்தார். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இன்ஸ்பெக்டர் சுப்பையா சமரசம் செய்தார்.
