/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இதுதான் ஒங்க வேலையா...: மதுரை பி.இ.ஓ., அலுவலகங்களில் ஆசிரியர்கள்: 'பில்' தயாரிப்பு பணியில் அலுவலர்கள் 'பெயில்'
/
இதுதான் ஒங்க வேலையா...: மதுரை பி.இ.ஓ., அலுவலகங்களில் ஆசிரியர்கள்: 'பில்' தயாரிப்பு பணியில் அலுவலர்கள் 'பெயில்'
இதுதான் ஒங்க வேலையா...: மதுரை பி.இ.ஓ., அலுவலகங்களில் ஆசிரியர்கள்: 'பில்' தயாரிப்பு பணியில் அலுவலர்கள் 'பெயில்'
இதுதான் ஒங்க வேலையா...: மதுரை பி.இ.ஓ., அலுவலகங்களில் ஆசிரியர்கள்: 'பில்' தயாரிப்பு பணியில் அலுவலர்கள் 'பெயில்'
UPDATED : ஜன 19, 2026 03:41 PM
ADDED : ஜன 19, 2026 05:06 AM

மதுரை: மதுரை தொடக்கக் கல்வித்துறையில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பில் தயாரிப்பு உள்ளிட்ட அலுவலகப் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாவட்டத்தில் மதுரை, திருமங்கலத்தில் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் உள்ளன. இரண்டுக்கும் உட்பட்டு 15 வட்டாரக் கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,க்கள்) அலுவலகங்கள் உள்ளன. தலா 2 பி.இ.ஓ.,க்கள், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணியில் உள்ளனர். இத்துறையில் 800க்கும் மேற்பட்ட அரசு, உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு சம்பள பில் தயாரிப்பது, பி.எப்., கடன், பி.எப்., பகுதி இறுதித் தொகை பெறுதல், அரியர் நிலுவை, ஓய்வூதியம், ஈட்டிய விடுப்பு, ஈட்டாவிடுப்பு ஒப்படைப்பு, பண்டிகை கால முன்பணம் வழங்குதல் உட்பட 10 வகை 'பில்'கள் தயாரிப்புப் பணி வட்டாரக் கல்வி அலுவலகங்களில் நடக்கின்றன.
ஆசிரியர்களால் குழப்பம்
ஆனால் பெரும்பாலான அலுவலகங்களில், அலுவலர்களுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் ஆசிரியர் என்பதை மறந்து பி.இ.ஓ., அலுவலகங்களில் உதவியாளர்களாகவே மாறிவிட்டனர். இதை பி.இ.ஓ.,க்கள் சிலர் ஊக்குவிக்கின்றனர். அந்த ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் பணியை கிடப்பில் போட்டுவிட்டு பள்ளிக்கும் அலுவலகத்திற்கும் 'இணைப்பு பாலமாக' செயல்பட்டு பல்வேறு காரியங்களை கச்சிதமாக முடித்துக் கொடுக்கின்றனர். இதனால் அலுவலகத்தில் நிர்வாக ரீதியாக குழப்பங்கள் ஏற்படுவதாக நேர்மையாக பணியாற்றும் அலுவலர்கள் புலம்புகின்றனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: அலுவலக பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என தொடக்கக் இயக்குநர் உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் அதை மீறி சில பி.இ.ஓ.,க்கள் அலுவலகங்களில் ஆசிரியர்களை அனுமதிக்கின்றனர். அலுவலர்கள் ரகசியம் காக்க வேண்டிய பாஸ்வேர்டுகள், இமெயில் முகவரிகள் ஆசிரியர்களுக்கு தாராளமாக வழங்கப்படுகின்றன.
அலுவலகங்களுக்கு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் தான் 'டார்க்கெட்' ஆக உள்ளனர். ஆசிரியரை பயன்படுத்தக் கூடாது என சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இதன் எதிரொலியாக திருப்பரங்குன்றம் பி.இ.ஓ.,வுக்கு, திருமங்கலம் டி.இ.ஓ., உத்தரவு பிறப்பித்தார். ஆனாலும் நடவடிக்கை இல்லை.
விருப்ப ஓய்வில் சென்ற ஒரு ஆசிரியருக்கு பி.எப்., கணக்கீட்டில் குழப்பம் ஏற்பட்டு அவரிடம் ரூ.1.30 லட்சம் வரை பிடித்தம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மூலம் சம்பளப் பட்டியல் தயாரிக்கும் முறைக்கு இயக்குநர் நரேஷ் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சி.இ.ஓ., தயாளன் முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

