/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி
/
பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி
ADDED : ஜூலை 29, 2025 01:19 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட்டார விவசாயிகள் காரிப் பருவ குறுவை நெல் சாகுபடிக்கு பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர வேளாண் உதவி இயக்குனர் பாண்டி அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை கொண்டு இசேவை மையம் மூலம் காப்பீடு செய்யலாம். இதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பீட்டில் இருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
தேசிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகள், வேளாண் நகை கடன் பெறும், பெறாத விவசாயிகள் திட்டத்தில் இணையலாம்.
கட்டணத்தை தேசிய வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொது சேவை மையங்களில் செலுத்தலாம். நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.720 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள்.
பதிவு செய்யும்போது விவசாயிகள் பெயர் மற்றும் முகவரி நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிடப்பட்டுள்ள நிலம் உள்ள கிராமம் ஆகியவற்றை சரி பார்க்கவேண்டும். விபரங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள், உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.