ADDED : அக் 29, 2025 07:43 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி தேரோட்டம் நடந்தது.
காலை 8:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சட்டத்தேரில் எழுந்தருளினார். அக். 22 முதல் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள், கிரிவலம் சென்று கோயில் முன்பு தேர் நிலை நிறுத்தப்பட்டது.
கோயில் கம்பத்தடி மண்டபத்திலுள்ள மயிலுக்கு அபிஷேகம் நடந்தது. விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காப்புகளை கழற்றி விரதத்தை முடித்தனர்.
பாவாடை நைவேதனம் மாலை 3:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக் கவசம் சாத்துப்படியாகி 108 படி அரிசியினால் தயாரான தயிர் சாதம் படைக்கப்பட்டு அதன் மேல் காய்கறிகள், பழங்கள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாவாடை தரிசனம் நடந்தது. மற்ற மூலவர்கள் கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக் கவசங்கள் சாத்துப்படியானது. இரவு வீதி உலா நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள் பாலித்தனர்.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வம், பொம்மை தேவன், ராமையா திருவிழா ஏற்பாடுகள் செய்தனர்.

