ADDED : அக் 21, 2025 03:46 AM

சோழவந்தான்: 'சோழவந்தான் அருகே முதலைக்குளம் முத்தாலம்மன் கோயில் கட்டுமான பணிகளுக்கு இடையூறாக அமைந்துள்ளபுளிய மரத்தை அகற்ற வேண்டும்' என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
அப்பகுதி கனிச்செல்வம் கூறியதாவது: முதலைக்குளம், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, அம்மன் கோயில்பட்டி உட்பட 8 ஊருக்கான முத்தாலம்மன் கோயில் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் புரட்டாசி பொங்கல் விழாவில் பலஆயிரம் பேர் பால்குடம், தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, முளைப்பாரி எடுத்து வழிபடுவர்.
கோயில் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் புதிய கட்டுமான பணி மேற்கொள்ள முடிவு செய்து ரூ.பல லட்சம் செலவில் பல மாதங்களாக பணி நடக்கிறது. கோயில் முகப்பு மண்டபத்தின் அருகே பெரிய புளியமரம் உள்ளது. முடிந்த வரையில் மரத்தை அகற்றாமல் பணிகளை முடிக்க முயற்சித்தோம். ஆனால் மரத்தை அகற்றாமல் பணியை நிறைவு செய்ய முடியாது.
எனவே மரத்தை அகற்ற உசிலம்பட்டி சப் கலெக்டர் உட்கர்ஷ் குமாரிடம் 2 மாதங்களுக்கு முன் கோரிக்கை வைத்தோம். நடவடிக்கை இல்லை. பலமுறை வருவாய் அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. கட்டுமான பணிகள் பாதியிலேயே நிற்கிறது.
இதனால் பொருட்செலவும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.