ADDED : பிப் 18, 2025 05:16 AM
மதுரை: ''புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்பதில் என்ன பிரச்னை. மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை'' என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்பி தவறான தகவல்களை பேசிக்கொண்டுள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் மிகத்தெளிவாக சொல்லி உள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஏற்பதில் என்ன பிரச்னை. இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விக் கொள்கை மிகவும் அவசியம். மொழியை வைத்து அரசியல் செய்யும் நிலை இப்போது இல்லை என்றார்.
பின்னர் திருப்பரங்குன்றம் சென்ற அவர் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கூட்டமாக செல்லக்கூடாது என போலீசார் தடுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனியாக செல்வதாக கூறி மலை ஏறினார்.
முன்னதாக அவர் கூறியதாவது:
1931ல் வந்த பிரிவியூ கவுன்சில் நீதிமன்ற தீர்ப்பிலேயே ஒட்டுமொத்த மலையும் 33 சென்ட் தவிர முருகப்பெருமானுக்கு சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தீர்ப்புக்கு மாறாக 1983ல் வருவாய் ஆவணங்களில் திடீரென அந்த யூ.டி.ஆர்., பதிவுகளில், தமிழ்நாடு அரசு 'சிக்கந்தர் மலை' என தவறாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இது 'திருப்பரங்குன்றம் மலை' என்று தான் இருக்க வேண்டும்.
1994 நீதிமன்ற தீர்ப்பின்படி, மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலைமேல் பராமரிப்பு என்பது 'ஜீரோவாக' உள்ளது என்றார்.

