ADDED : ஜூன் 10, 2026 04:04 AM

மா ந்தோப்பில் மாங்காய்களைசேதப்படுத்தும் பழத்துளைப்பான் புழு புதிதாக அதிகளவில் பரவி அல்போன்சா, பங்கனப்பள்ளி, செந்துாரா ரக மாங்காய்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த புழுக்கள், மாம்பழத்தை துளைத்துக் கொண்டு உள்ளே சென்று சதைப்பகுதியை உண்கிறது. இதனால் பழங்கள் சேதமடைந்த நிலையில் காய்கள் பழுப்பேறி கீழே விழுகின்றன. பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழிக்க வேண்டும். புழு தாக்கிய பழங்களை அகற்றி தண்ணீரில் மூழ்கடித்தோ அல்லது ஆழமான குழியிலோ புதைத்தால் புழுக்கள் வளர்ச்சியை தடுக்கலாம்.
கீழே விழும் பழங்களை அகற்றி மரத்தின் அடிப்பகுதியை சுத்தமாக வைத்தால் புழுக்கள் மறைவதற்கான இடங்கள் குறையும். சிறியஅளவில் (5 முதல் 7 செ.மீ) இருக்கும் பழங்களை காகிதம் அல்லது வலைப்பைகளால் மூடுவதன் மூலம் பூச்சிகள் முட்டை இடுவதை தடுக்கலாம். மரத்தின் கிளைகளை வெட்டி ஒளி மற்றும் காற்றோட்டத்தை அதிகரித்தால் பூச்சி வளர்ச்சிக்கு சாதகமில்லாத சூழல் உருவாகும்.
பழவளர்ச்சி காலத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் வேப்பெண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் அல்லது நீமசால் 2 மில்லி கலந்து 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மருந்து தெளிக்க வேண்டும்.
- பிரபா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சுரேஷ், தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், மதுரை
